தீபாவளிக் குதூகலத்தை வெளிநாட்டு ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ள நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 2,000 வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டு ரங்கோலி இடுவது, நடன அங்கம், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் பங்கெடுத்தனர். ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள பெஞ்சுரு பொழுதுபோக்கு நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
மனிதவள அமைச்சின் உத்தரவாத, பராமரிப்பு, ஈடுபடுத்தல் குழு, கார்னர்ஸ்டோன் சமூகச் சேவை அமைப்பு, 'மை பிரதர் எஸ்ஜி' குழு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ரங்கோலி கோலங்கள் வரைந்தனர். மிகப்பெரிய ரங்கோலியை வரைந்து கின்னஸ் சாதனை படைத்த ரங்கோலி கலைஞர் விஜயா மோகன் ஊழியர்களுக்கு வழிகாட்டினார். ரங்கோலி வரையும் போட்டியில் வெற்றிபெற்ற மூவருக்கு பற்றுச்சீட்டுகளும் மற்ற பல பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தீபாவளி தின்பண்டங்கள், கைக்கடிகாரங்கள் போன்ற பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் கொடுக்கப்பட்டன.
ஈராண்டுகளாக நீடித்த கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், தீபாவளியைக் கொண்டாட இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக இருந்ததாக நிகழ்ச்சியை இணைந்து நடத்திய 'மை பிரதர்எஸ்ஜி' அமைப்பின் நிறுவனர் தம் வாய் ஜியா குறிப்பிட்டார்.
மேலும், வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரர்களுடன் ஒன்றிணைய இந்த நிகழ்ச்சி உதவியதாகவும் அவர் கூறினார்.