நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) தேசிய கல்விக் கழக ஆசியமொழிகள், பண்பாடுகள் துறையின்கீழ் இயங்கும் தமிழ்மொழி, பண்பாட்டுத்துறை, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ்மொழி மன்றம், தேசிய கல்விக் கழகத் தமிழ்மொழி மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து கடந்த வாரம் புதன்கிழமை 'பரவசத் தீபாவளி' என்னும் தலைப்பில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.
கொவிட்-19 காரணமாக கடந்த ஈராண்டுகளாக மெய்நிகர் வழி நடைபெற்று வந்தது தீபாவளி நிகழ்வு. தற்போது கட்டுப்பாடுகள் தளர்ந்துள்ளதால், இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டம் நேரடி நிகழ்வாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர் கல்வி அலுவலகத்தில் பயிற்சி வகுப்புத் திட்டங்களுக்கான திட்டமிடலுக்கும் நிர்வாகத்திற்குமான இணைப் புல முதன்மையரும் பார்வைவழி மற்றும் நிகழ்த்துக் கலைகள் துறையின் இணைப் பேராசிரியருமான எடி சோங் குவாங் மெய் பங்கேற்றார்.
தேசிய கல்விக் கழக, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் புலத் தலைவர்கள், பல்வேறு கல்வியியல் துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வியாளர்கள், அலுவலக அதிகாரிகள், மாணவ ஆசிரியர்கள் போன்றோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து வந்தார் இணைப் பேராசிரியர் எடி சோங். சிறப்பு விருந்தினரும் முக்கிய விருந்தினர்களும் மத்தாப்புகளைக் கொளுத்தித் தீபாவளிக் கொண்டாட்ட உணர்வில் திளைத்தனர். அதன் பின்னர், பாரம்பரிய முறையில் குத்துவிளக்கேற்றப்பட்டு நிகழ்வு தொடங்கியது.
லிட்டில் இந்தியாவில் தங்கி இருந்ததை நினைவுகூர்ந்த இணைப் பேராசிரியர் எடி சோங், இடியாப்பம், வெங்காய ஊத்தப்பம், மசாலா தோசை போன்ற தமிழ் உணவுகளை இன்றும் உண்டு வருவதாக குறிப்பிட்டு, தமிழர் பாரம்பரியத்தோடு தமக்கிருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தினார்.
தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாகக் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. பட்டப் படிப்புக்குப் பிந்திய பட்டயக்கல்வி பயிலும் மாணவி பிரியதர்ஷினி பாடல் ஒன்றைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார். இளங்கலைப் பட்டக்கல்வி பயிலும் ஷ்ருதிகா, நந்தினி இருவரின் நடன அங்கம் இடம்பெற்றது. அதனையடுத்து, பட்டயக்கல்வி பயிலும் மாணவி ரோஷினியின் படைப்பாக்கத்தில் தமிழர் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை எடுத்துரைக்கும் நாடக அங்கம் இடம்பெற்றது.
தமிழர் பாரம்பரிய உடைஅணிந்து வந்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

