மோனலிசா
சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் (எஸ்ஐஎஃப்) கம்போடியா நாட்டு கிராமப்புறங்களுக்கு சுத்தமான நீர் வழங்கும் முயற்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கான 'வாட்டர் பாஃர் லைஃப்' எனும் திட்டத்தின் மூன்றாவது கட்டம் அண்மையில் சியாம் ரீப் மாகாண கிராமப்புறங்களுக்காகத் தொடங்கப்பட்டது.
பத்து ஆண்டுகளாக இத்திட்டத்தின் தொண்டூழியரான செல்வசுந்தரம் நாகலிங்கம் (படம்), சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஓய்வு பெற்ற மாஸ்டர் வாரண்ட் அதிகாரி.
"சுத்தமான தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. அதை வழங்குவதற்கான இம்முயற்சியால் கம்போடிய மக்களின் வாழ்க்கைமுறை மேம்பட்டுள்ளது. தொண்டூழியத்தில் தொடர்ந்து ஈடுபட இது எனக்கு உந்துசக்தியாக அமைகிறது," என்றார் இவர்.
இதுவரை 20 முறை கம்போடியா சென்றுள்ள சுந்தரம், கம்போடியர்களுடன் மிக நெருக்கமான உறவை வளர்த்துள்ளார். மொழிபெயர்ப்பாளர்கள், ஓட்டுநர்கள் என உள்ளூர் சமூகத்துடனான இவரது தொடர்பு அவர்களை ஒன்றிணைத்து ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்தப் பெரிதும் உதவுகிறது.
கிராம மக்களில் பலர் இவரைத் தங்கள் உறவினராகவே நினைத்துப் பழகுகின்றனர். சிங்கப்பூரை ஒரு பணக்கார நாடாக மட்டுமே பார்த்த இம்மக்கள் தற்போது சிங்கப்பூரர்களின் நற்குணத்தை இனம்கண்டு உள்ளதாக இவர் கூறினார்.

