பொதுச் சுகாதார ஆராய்ச்சியாளரான 34 வயது ஆயிஷா பர்வின், எஸ்ஐஎஃப் தொண்டூழியர்களில் ஒருவர்.
தன்னுடைய தொண்டூழிய அனுபவம் பற்றி பகிர்கையில், "எந்த ஒரு சமூகத்தின் நல்வாழ்வுக்கும் அடிப்படை அதன் ஆரோக்கியமே. அவ்வகையில் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள கம்போடிய மக்களுக்கான இந்நற்பணியில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,"என்றார் இவர்.
2014ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தின்கீழ் தொண்டூழியம் செய்துவரும் இவர் இதுவரை மூன்றுமுறை கம்போடியா சென்றுள்ளார்.
"நான் சென்றமுறை வந்திருந்தபோது சந்தித்த மக்கள் இம்முறை என்னை நினைவுகூர்ந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. சென்ற முறை நாங்கள் நுண்ணுயிரி-மணல் நீர் வடிகட்டி நிறுவிய குடும்பங்களுக்கு மீண்டும் சென்றபோது அந்த வடிகட்டிகள் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள ஆரோக்கிய மேம்பாடு மிகுந்த மனநிறைவை அளித்தது," என்றார் ஆயிஷா.
சக தொண்டூழியர்களுடன் பழகும் வாய்ப்பாகவும் சொந்த வாழ்வில் தான் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளை நன்றியுடன் அணுகவும் நிறைவான மனத்துடன் வாழவும் இத்தொண்டூழியம் வாய்ப்பாக அமைந்தது என்கிறார் இவர்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக எஸ்ஐஎஃப் நிறுவனத்துடன் இணைந்து தொண்டூழியம் செய்து வருகிறார் 41 வயதான அஸ்லினா அகமது. மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர், குழந்தைகளை விட்டுச் செல்வது கடினமாக இருந்தாலும் தன் பிள்ளைகள் வயதில் உள்ள பிற பிள்ளைகளுக்கு உதவும் முயற்சியில் ஈடுபடுவது ஊக்கம் அளிப்பதாகக் கூறினார்.
"வெளிநாடுகளில் தொண்டூழியம் செய்யும்போது அவர்களது வாழ்க்கை நிலை, மனநிலை, பொருளாதாரச் சூழல் போன்றவற்றை நேரடியாகத் தெரிந்துகொள்ள இயலும்.
இந்த அனுபவம் வாழ்க்கைமீது ஒரு பக்குவப்பட்ட நிலையான பார்வையை அளிக்கும். கூடுதலான சிங்கப்பூர் இளையர்கள் இத்தகைய தொண்டூழியத்தில் ஈடுபட வேண்டும்," என்று வலியுறுத்திய இவர், "என் பிள்ளைகளையும் இவ்வாறு ஊக்குவிப்பேன்," என்றார்.

