எஸ்ஐஎஃப், 2010ஆம் ஆண்டு முதல் 'வாட்டர் பாஃர் கம்போடியா' எனும் அறக்கட்டளையுடன் இணைந்து 'வாட்டர் பாஃர் லைஃப்' திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.
இத்திட்டத்தின்கீழ், நுண்ணுயிரி-மணல் நீர் வடிகட்டிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது.
நீர் மூலம் பரவும் நோய்களைக் குறைத்தல், சுகாதார நடைமுறைகளின்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அடிப்படைச் சுகாதாரக் கல்வி உள்ளிட்ட, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களின் மூலம் கம்போடியாவில் இதுவரை 74,000க்கு மேற்பட்ட கிராமவாசிகள் பலன் அடைந்துள்ளனர். திட்டத்தின் மூன்றாம் கட்டம் அண்மையில் சியாம் ரீப் மாகாணத்தில் தொடங்கப்பட்டது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 160 எஸ்ஐஎஃப் தொண்டூழியர்களைக் கொண்டு சௌட் நிக்கோம், சீ கிரெங் ஆகிய மாவட்டங்களின் கிராம வீடுகளில் 600 நுண்ணுயிரி-மணல் நீர் வடிகட்டிகள் நிறுவப்படும். இதனால் மேலும் 5,700 கிராமவாசிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
நிலையான சுகாதார மேலாண்மையை உறுதிசெய்யும் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 6-ஐ இத்திட்டம் ஆதரிக்கிறது. மேலும் இத்திட்டம் கம்போடிய அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறவாசிகளுக்கு சுகாதாரமான வாழ்க்கைச் சூழலை உருவாக்கும் குறிக்கோளையும் அடைய உதவுகிறது.

