மெல்பர்ன்: இவ்வாண்டின் ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தானை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பந்தடித்த பாகிஸ்தான் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. ஆட்டத்தில் வெல்ல இங்கிலாந்து 138 ஓட்டங்களை எடுக்கவேண்டியிருந்தது.
அதற்குப் பிறகு 19 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை அடைந்தது இங்கிலாந்து.
பந்தடித்தபோது ஒரு கட்டத்தில் இங்கிலாந்து சிரமப்பட்டது. பாகிஸ்தானின் பந்து வீச்சாளர்களைச் சமாளிக்கமுடியாமல் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 45 ஓட்டங்களை எடுத்தது, அதற்குப் பிறகு நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்களை எடுத்திருந்தது.
எனினும், அதைத் தொடர்ந்து சவாலை நன்கு எதிர்கொண்டு வெற்றிகண்டது இங்கிலாந்து. 52 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்திலிருந்து வெளியேறாமல் இருந்தார் இங்கிலாந்து நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ். பாகிஸ்தானின் பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி காயமுற்றார். அதை ஸ்டோக்ஸ் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.
சேம் கியூரான், அடில் ராஷிட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சே இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கிண்ணம், 50 ஓவர் ஆட்டங்களைக் கொண்ட உலகக் கிண்ணம் ஆகிய இரண்டையும் வென்றுள்ள முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. அதோடு, இரண்டாவது முறையாக இக்குழு டி20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. முன்னதாக 2010ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றது.

