மான்செஸ்டர்: போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தான் விளையாடும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி எரிக் டென் ஹாக் மீது தனக்கு மதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார். தற்போதைய காற்பந்துப் பருவம் தொடங்குவதற்கு முன்பு டென் ஹாக் தன்னை குழுவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றதாகவும் ரொனால்டோ கூறினார்.
"டென் ஹாக் என்னை மதித்து நடக்காததால் எனக்கு அவர் மீது மதிப்பில்லை," என்று 'பியர்ஸ் மோர்கன் அன்சென்சர்ட்' எனும் நிகழ்ச்சியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கூறினார் ரொனால்டோ.
"எனக்கு மதிப்பு தராதவரை என்றுமே மதிக்கமாட்டேன்," என்று ரொனால்டோ குறிப்பிட்டார். குழுவின் நிர்வாகி மட்டுமின்றி ஓரிரு விளையாட்டாளர்களும் தன்னை மதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அண்மையில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பருக்கு எதிராக யுனைடெட் மோதிய பிரிமியர் லீக் ஆட்டத்தில் 37 வயது ரொனால்டோ மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்க மறுத்ததைத் தொடர்ந்து ரொனால்டோ குழுவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
நோய் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் ரொனால்டோ விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற ஃபுல்ஹமுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது.
நேர்காணலில் ரொனால்டோ இவ்வாறு பேசியிருப்பது யுனைடெட்டைப் பெரிதும் கோபப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகக் கடைசி நிலவரப்படி யுனைடெட் நேரடியாக கருத்து ஏதும் வெளியிடவில்லை.

