தோஹா: மத்திய கிழக்கு நாடான கத்தார் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. அதனால் அங்கு வெயில் சுட்டெரிக்கக்கூடும்.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கத்தாருக்குப் பயணம் மேற்கொண்டபோது வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். அப்போது உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு ஆறே வாரங்கள் எஞ்சியிருந்தன.
இப்படிப்பட்ட பருவநிலையை எதிர்கொள்ளும் கத்தாரில் எப்படி காற்பந்தாட்டங்கள் இடம்பெறும் என்ற கேள்வி பல தரப்பினரிடையே நிலவியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது கத்தாரின் அல் வாக்கிரா நகரில் இருக்கும் அல் ஜனூப் விளையாட்டரங்கம்.
வெயிலை எதிர்கொண்டு உலகக் கிண்ணப் போட்டியை நடத்த தீர்வுகளை வழங்கியவர் சாட் அப்துல்-அஸிஸ் அப்துல்-கானி என்றழைக்கப்படும் ஒருவர். 'டாக்டர் கூல்', அதாவது குளிரூட்டும் நிபுணர் என்று செல்லமாக அழைக்கப்படும் அவர் கத்தார் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றுபவர்.
அல் ஜனூப் விளையாட்டரங்கில் சுமார் 300 சிறு உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், விளையாட்டாரங்கில் உள்ள ரசிகர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் உள்ளிட்டவற்றின் தொடர்பிலான தகவல்களை உணர்கருவிகள் சேகரிக்கும்.
அந்தத் தகவல்களைக் கொண்டு அதிகாரிகள் தேவையான அளவு விளையாட்டரங்கிற்குக் குளிரூட்டுவர்.
வெப்பநிலையைச் சமாளிக்க விளையாட்டாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் உதவ இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டி கத்தாரின் குளிர்காலமான நவம்பர் மாதத்துக்கு மாற்றி வைக்கப்பட்டது. இருந்தாலும், போட்டி நிறைவடைந்த பிறகும் வசதியான முறையில் காற்பந்தாட்டங்களை நடத்த இந்த ஏற்பாடு தொடர்ந்து கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

