தோஹா: டென்மார்க்கைச் சேர்ந்த படக்குழு ஒன்றை கத்தாரின் பாதுகாப்பு அதிகாரிகள் மிரட்டியிருக்கின்றனர். கத்தார் தலைநகர் தோஹாவில் நேரடியாக ஒளிபரப்பான அச்சம்பவத்தைத் தொடர்ந்து கத்தாரின் உலகக் கிண்ணப் போட்டியின் அரசு ஏற்பாட்டுக் குழு சம்பந்தப்பட்ட டென்மார்க் படக்குழுவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
டென்மார்க்கைச் சேர்ந்த ராஸ்முஸ் டான்ட்ஹோல்ட் எனும் செய்தியாளர் நேரடியாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மிரட்டியது பதிவான காணொளி சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டது.
டான்ட்ஹோல்ட் முதலில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கோபத்துடன் பேசினார்.
அதற்குப் பிறகு தனது கேமரா உள்ளிட்ட கருவிகளை அவர்கள் உடைக்க நினைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

