சிட்னி: ஆஸ்திரேலியாவில் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச்சுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள ஜோக்கோவிச் மறுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் ஜோக்கோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டது. இப்போது தடை விலக்கப்பட்டதையடுத்து அவர் மீண்டும் விசாவுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளுவது குறித்து ஜோக்கோவிச்சும் ஆஸ்திரேலியப் பொதுவிருது ஏற்பாட்டாளர்களும் கடந்த சில வாரங்களாக ஆலோசித்து வந்தனர்.
அதே வேளையில், ஜோக்கோவிச்சுக்காக ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்போவதில்லை என்றும் போட்டியின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை என்று கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜோக்கோவிச்சுக்கு எதிரான மூவாண்டுத் தடை விலக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொவிட்-19 விதிமுறைகள் பல பெரிய அளவில் தளர்த்தப்பட்டுள்ளன.
வரும் ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டியில் 22வது முறையாக கிராண்ட் சிலாம் விருதை வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளார் ஜோக்கோவிச்.

