ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து உலகக் கிண்ணக் காற்பந்து வெற்றியைக் கொண்டாடிய அர்ஜென்டினா
பியூனஸ் அய்ரஸ்: கனவு மெய்ப்படாதா என்று 36 ஆண்டுகளாகக் காத்திருந்த அர்ஜென்டினா மக்களுக்கு அக்கனவை நனவாக்கிய தங்கள் வெற்றி நாயகர்களை வரவேற்பதற்காக ஓரிரவு விழித்திருப்பது ஒன்றும் கடினமாக இல்லை.
அப்படி விழித்திருந்து, கொண்டாடிக் களிக்க ஏதுவாக அர்ஜென்டினா அரசாங்கமும் ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்தது, மக்களுக்கு மேலும் உற்சாகமளிப்பதாக அமைந்தது.
கத்தாரில் கடந்த 18ஆம் தேதி இரவு நடந்த உலகக் கிண்ணக் காற்பந்து இறுதிப் போட்டியில் தங்கள் அணி பிரான்ஸ் அணியை வென்றதும் அர்ஜென்டினாவில் திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டமும் கும்மாளமும் இரவு முழுக்க அரங்கேறின.
அந்தப் பெருமகிழ்ச்சிக் கொண்டாட்டம் இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என்றார் ஆசிரியராகப் பணியாற்றும் 44 வயது வெரோனிக்கா சில்வா.
இதைவிடப் பெரிய கொண்டாட்டம் வெற்றி வீரர்கள் நாடு திரும்பியதும்தான் இருக்கிறது என்று 63 வயதிலும் துள்ளலுடன் கூறினார் ரோஸா ரோட்ரிகெஸ் எனும் துப்புரவாளர்.
அதே ஆர்வம் அர்ஜென்டினா அணி வீரர்களுக்கும் இருந்தது. கத்தாரில் உலகக் கிண்ணத்தை வென்றபின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்தபோதும், தாய்நாட்டில் தங்கள் மக்களோடு சேர்ந்து அம்மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் தருணத்திற்காக அர்ஜென்டினா காற்பந்து அணியினரும் பேராவலுடன் காத்திருந்தனர்.
“எங்களது வெற்றியை மக்கள் எப்படிக் கொண்டாடுகின்றனர் என்பதைக் காண்பதற்காக இப்போது அர்ஜென்டினாவில் இருக்க விரும்புகிறேன்,” என்று கூறியிருந்தார் அர்ஜென்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி.
“அவர்கள் எனக்காகக் காத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதே நேரத்தில், நேரில் சென்று என் நாட்டு மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு, கொண்டாட என்னால் காத்திருக்க முடியவில்லை,” என்றும் மெஸ்ஸி சொன்னார்.
கத்தாரிலிருந்து அர்ஜென்டினா அணியினர் சென்ற விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 2.40 மணிக்கு பியூனஸ் அய்ரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களைப் போட்ட மெஸ்ஸி கிண்ணத்தைக் கையில் ஏந்தியபடி, பயிற்றுநர் லயனல் ஸ்கலோனி இடப்பக்கமாக இருக்க முதல் ஆளாக விமானத்திலிருந்து வெளியில் வந்தார்.
அவர்கள் வந்த ஏஆர்1915 என்ற அர்ஜென்டினா ஏர்லைன்ஸ் விமானத்தின் வால்பகுதியில் மெஸ்ஸியின் படமும் ‘ஓர் அணி, ஒரு நாடு, ஒரே கனவு’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தன.
விமானத்தில் இருந்து இறங்கிய வெற்றி அணியினருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னணியில் அர்ஜென்டினா அணியின் உலகக் கிண்ணப் பாடல் ஒலிக்க, அவர்கள் அனைவரும் நேராக திறந்த பேருந்தில் ஏறி, தங்களை வரவேற்கத் திரண்டிருந்த மக்கள்முன் தோன்றினர்.
சற்று நேரத்தில் அப்பேருந்து அர்ஜென்டினா காற்பந்துச் சங்க வளாகத்திற்குப் புறப்பட்டுச் சென்றது. அங்கு அவர்களை வரவேற்க பல்லாயிரம் பேர் காத்திருந்தனர்.
வீரர்கள் அனைவரும் தங்களது கழுத்தில் வெற்றிப் பதக்கத்தை அணிந்தபடி, ஒருவர்பின் ஒருவராகக் கிண்ணத்தை உயர்த்திக் காட்டியது, தாங்கள் சாதித்துவிட்டதைத் தாய்நாட்டு மக்களிடம் எடுத்து உரைப்பதாக இருந்தது.
கிண்ணத்துடன் தங்கள் வெற்றி நாயகர்களைக் கண்டு இன்ப வெள்ளத்தில் மூழ்கிய மக்கள், தங்களது கைப்பேசிகளின் மின்வெட்டொளியை ஒளிரச்செய்து, படம் எடுத்தபடியே இருந்தது, தரையில் பல்லாயிரம் முறை சிறுமின்னல்கள் தோன்றியதுபோல் காட்சியளித்தது.
இசைக்கருவிகளின் தாளத்திற்கு ஏற்றபடி மக்களின் பாடலுக்கும் இரவைப் பகலாக்கிய வாண வேடிக்கைகளுக்கும் இடையில், வீரர்கள் இருந்த திறந்த பேருந்து பெருவெள்ளமெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே மெல்ல ஊர்ந்தது.
நண்பகலில் திறந்த பேருந்தில் நகர்வலம் சென்ற வீரர்களுக்கு வழிநெடுகிலும் மக்களின் வரவேற்பு கிட்டியது. பின்னர் நகர்மையமான நான்முகத் தூண் பகுதியைச் சென்றடைந்த அவர்கள், அங்கு பல நூறாயிரம் பேருடன் சேர்ந்து தங்களின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.