ரபாட்: அடுத்த 15-20 ஆண்டுகளில் ஆப்பிரிக்க அணி ஒன்று உலகக் கிண்ணக் காற்பந்தில் வாகை சூடும் என்று மொரோக்கோ அணியின் பயிற்றுவிப்பாளர் வலீத் ரெக்ரகி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அண்மையில் கத்தாரில் நடந்த உலகக் கிண்ணத் தொடரில் மொரோக்கோ அணி நான்காம் இடத்தைப் பிடித்தது. உலகக் கிண்ணக் காற்பந்தில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையையும் அவ்வணி படைத்தது.
அடுத்த உலகக் கிண்ணத் தொடரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து 2026ஆம் ஆண்டில் நடத்தவுள்ளன. அப்போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 32லிருந்து 48ஆக உயர்த்தப்பட உள்ளது. குறைந்தது ஒன்பது ஆப்பிரிக்க அணிகளுக்கு அத்தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
"ஆப்பிரிக்காவிலிருந்து ஒன்பது அணிகள் பங்கேற்கும்போது, நாங்கள் நிறைய கற்றுக்கொள்வோம். அப்படிக் கற்றுக்கொண்டபின், இன்னும் 15-20 ஆண்டுகளில் ஆப்பிரிக்க அணி ஒன்று உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று ரெக்ரகி தெரிவித்திருக்கிறார்.
நடந்து முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் எஃப் பிரிவில் முதலிடம் பிடித்த மொரோக்கோ அணி, இரண்டாம் சுற்றில் ஸ்பெயினையும் காலிறுதியில் போர்ச்சுகலையும் தோற்கடித்து, காற்பந்து உலகை வியப்பில் ஆழ்த்தியது.
"எங்களது செயல்பாடு எதிர்பார்ப்பை விஞ்சுவதாக இருந்தது. முன்னணிக் குழுக்களுக்கு நிகராக எங்களால் விளையாட முடியும் என்பதைக் காட்டியுள்ளோம். சிறு சிறு நுணுக்கங்களே ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கின்றன," என்று ரெக்ரகி கூறினார்.
தங்களது அணிக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளதாகக் குறிப்பிட்ட இவர், ஒரு நாள் உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும் சொன்னார்.

