கொவிட்-19 காலத்தில் உடல்நலம் குறித்து சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருந்து உள்ளனர். அதாவது 2021ல் 58.3 விழுக்காடு குடியிருப்பாளர்கள் மனநல நிபுணர்களின் உதவியைப் பெறத் தயாராக இருந்தனர். இது, 2019இல் 47.8 விழுக்காடாக இருந்தது.
மேலும், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் மட்டுமல்லாமல் மற்ற வகையிலும் சிங்கப்பூரர்கள் உதவியை நாடியிருக்கின்றனர்.
நண்பர் உள்ளிட்டவர்களிட மிருந்து 69.1 விழுக்காட்டினர் உதவியை நாடியுள்ளனர்.
அதே சமயத்தில் 2019இல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து உதவி பெற்றவர்களின் விழுக்காடு 74.5லிருந்து குறைந்தது.
கொள்ளைநோய் காலத்தில் தனிப்பட்ட சுகாதாரம் குறித்து அதிகமனோரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதே அதற்கு காரணமாகும்.
சிங்கப்பூரர்களில் அதிகமானோர் தங்களுடைய உடல் நலனில் அக்கறை செலுத்தினர் என்று தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வு அண்மையில் வெளியிட்டபோது சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மனநல சிகிச்சைக்கான மற்ற வழிகளும் சமூக ஆதரவையும் வலுப்படுத்தும் முயற்சிகள் அதிகம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்கள் சுகாதாரத்தைத் தெரிந்து கொள்வதற்காக தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
தேசிய மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பில் 18 முதல் 74 வயதுடைய சிங்கப்பூர் குடியிருப்பாளர்களின் உடல்நலம் மற்றும் ஆபத்தான அம்சங்கள் கண்டறியப் படுகின்றன. சுகாதார அமைச்சும் சுகாதார மேம்பாட்டுக் கழகமும் இந்த ஆய்வை நடத்துகின்றன.
ஜூலை 2020 மற்றும் ஜூன் 2021க்கு இடையில் குடியிருப்பாளர்கள் பங்கேற்ற ஆய்வில் மன நலத்திற்கு உதவியைப் பெற விரும்புவோர்களிடம் வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
பெண்களில் 59.8 விழுக்காட்டினர், ஆண்களைவிட (56.8%) பொதுவாக மனநல உதவியை நாடுவதற்கான வாய்ப்புகள் சற்றுக் கூடுதலாக உள்ளது.
ஆனால் 60 முதல் 74 வயது வரையிலான முதியவர்களில் 45.8 விழுக்காட்டினர் மட்டுமே சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களின் உதவியைப் பெற விரும்புகின்றனர். இதனால் இந்த வயதுப் பிரிவினர்குறைவான உதவி பெறுபவர்களாக உள்ளனர்.
முப்பது முதல் 39 வயது வரையிலான பிரிவு 67.7 விழுக்காட்டுடன் அதிக உதவியைப் பெறு பவர்களாக இருக்கின்றனர்.
மக்களின் மனநலம் தொடர்பாக தேசிய மக்கள்தொகை ஆய்வில் கண்டறிந்தவை கொள்ளைநோய் காலத்தில் சுகாதாரம் தொடர்பான மனநலப் பிரச்சினைகள் அதிகரிப் புடன் ஒத்துப்போகிறது.
2020 மே முதல் 2021 ஜூன் வரையில் மனநலக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்ற 1,000க்கும் மேற்பட்டோரில் ஏறக்குறைய 13 விழுக்காட்டினர் கொள்ளைநோய் காலத்தில் மன அழுத்தம் அல்லது கவலைக்கான அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவித்தனர்.
நேர்காணல் காண்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு 8.7 விழுக்காட்டினர் மனஉளைச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர். 9.4 விழுக்காட்டினர் கவலை இருந்ததாகவும் கூறினர். மேலும் 9.3 விழுக்காட்டினர் மிதமானது முதல் தீவிர மன உளைச்சலில் இருந்ததாகக் கூறினர். 7.4 விழுக்காட்டினருக்கு தூக்கமின்மை இருந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சு, மனநல ஆதரவுக்கான முயற்சிகளை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளது.
சமூக மனநல சுகாதார சேவைகள், மனநலம் குறித்த விழிப்புணர்வு, முன்கூட்டியே கண்டு பிடிப்பதற்கான மருத்துவ சோதனைகளை நடத்துவது, மன நலத்தை மதிப்பிடுவது போன்றவை அவற்றில் அடங்கும்.
கொள்ளைநோய் காலத்தில் ஊழியர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் முக்கியத்தும் குறித்தும் பொது மற்றும் தனியார் துறையில் உள்ள முதலாளிகளுக்கு வலியுறுத்தப்பட்டதாக 2021 ஆகஸ்டில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது.
தனியார் துறையில் குறைந்தது நான்கு நிறுவனங்கள், கிருமித் தொற்றின் ஆரம்பக் காலத்திலேயே மனநலத்திற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தியிருந்தன.
உதாரணமாக, உணவு விநி யோகிப்பு நிறுவனமான சோடெக்சோ, ஜூலை 2020ல் 12 மனநலம் தொடர்பான கருத்தரங்குளை நடத்தியது.
சுகாதார அமைச்சும் நடப்பில் உள்ள மனநலத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய, பல அமைப்புகளுக்கு இடையிலான பணிக் குழுவை அமைத்தது.
இந்தப் பணிக்குழுவில் 30க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகளும் அதன் உறுப்பினர்களும் இடம்பெற்று இருந்தனர். இது, அண்மையில் பொது ஆலோசனையை நடத்தியது. இதில் பெறப்பட்ட கருத்துகளைக் கொண்டு சிங்கப்பூரின் மனநலத் திட்டங்களை மேம்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.
( தகவல்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் )

