நீரிழிவு நோயாளிகளுக்கு நுண்ணூட்டச் சத்து குறைபாடு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து ஆகியவை தவிர்த்து மனித உடலுக்கு அவசியமான நுண்ணூட்டச் சத்துகளும் சரியான விகிதத்தில் தேவைப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, இரும்புச் சத்து, வைட்டமின் பி 12, வைட்டமின் டி, வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம், செலினியம் உள்ளிட்ட தாதுக்கள் போன்றவை.
உடலில் நுண்ணூட்டச்சத்து குறைந்தால் பல வகை நோய்கள் ஏற்படும்.
அயோடின் குறைந்தால் தைராய்டு அழற்சி, இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஆகியவை ஏற்படும். வைட்டமின் பி குறைந்தால் நரம்புகள் பாதிக்கப்படும். வைட்டமின் டி அல்லது கால்சியம் குறைபாட்டால் எலும்பு பலவீனம், ஃபோலேட் குறைபாட்டால் கரு வளர்ச்சியில் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
காய்ச்சல், நாள்பட்ட நோய்கள், குடல் செயலிழப்பு, நுண்ணூட்டச் சத்துகளை உணவில் சேர்த்துக்கொள்ளாமை, வயிற்றுப்போக்கு, வாந்தி, மன அழுத்தம் போன்றவற்றால் உடலில் நுண்ணூட்டச் சத்து குறைய வாய்ப்புண்டு.
இதனால் குழந்தைகள் அல்லது கர்ப்பிணிகளுக்கு மூளை, எலும்பு, நோய் எதிர்ப்புச் சக்தி, ரத்தம் உறைதல் ஆகியவை பாதிப்பதுடன் முக்கிய உடலுறுப்பு களின் செயல்பாடும் வளர்ச்சியும் பாதிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வயதான நீரிழிவு நோயாளிகளுக்கு வேறு சில உடல்நலச் சிக்கல்களும் இருந்தால் பாதிப்பு அதிகமாயிருக்கும். இருப்பினும் மருத்துவரின் ஆலோசனை இன்றி தாங்களாகவே நுண்ணூட்டச் சத்து மாத்திரைகளைப் பயன்படுத்துவது நல்லதல்ல என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

