மனநலனின் முக்கியத்துவத்தைக் கடந்த சில ஆண்டுகள் பலருக்கும் உணர்த்தியுள்ளன. புத்தாண்டில் மனநலனுக்கு முன்னுரிமை தர விரும்புவோர் சில எளிய பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்கலாம்.
மன அழுத்தத்தைச் சமாளித்து மனம் இளைப்பாற சில உத்திகளைத் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். அதில் முக்கியமானது மூச்சுப் பயிற்சி. முறையான மூச்சுப் பயிற்சி உடலும் மனமும் அமைதிகொள்ள உதவும்.
அதைத் தவிர, வாசித்தல், நறுமண சிகிச்சை, உடற்பிடிப்பு போன்றவையும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
அடுத்து நன்றிகூறுதல். நன்றிகூறுதலை அன்றாடப் பழக்கமாக்குவதால், மன அழுத்தம் குறைந்து வாழ்க்கை குறித்த உற்சாகமும் நம்பிக்கையும் பெருகும். நன்றி கூறுவதற்கு நம்மைச் சுற்றி உள்ள அம்சங்களை பட்டியலிடலாம்.
சமூகத்துடன் உறவாடுங்கள். குடும்பத்தாருக்கும் நண்பர்களும் நேரம் ஒதுக்கும்போது, தனித்திருக்கும் உணர்வு குறையும். பிரச்சினைகளால் உங்கள் மனது சோர்வடையும்போதும் உதவிக்கரம் நீட்ட அவர்கள் உடனிருப்பார்கள்.
மேலும், உடல் உறுதியாக இருந்தாலும் மனதும் நலம் பெறும் என்பதை மறக்க வேண்டாம். தூக்கமும் தண்ணீரும் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யுங்கள். முறையான உணவுப் பழக்கத்தைக் கடைபிடியுங்கள். மகிழ்ச்சியைத் தூண்டும் உணவுவகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி உடற்பயிற்சி செய்யுங்கள்.
அளவுக்கு அதிகமாக சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தும்போது தேவையில்லாமல் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடத் தோன்றும்.
அதனால் சமூக ஊடகத்தை அளவுடன் பயன்படுத்துங்கள். எழுந்த பின்னரும் தூங்கும் முன்னரும் சமூக ஊடகங்களைத் தவிர்த்திடுங்கள்.
அடுத்து, எண்ணங்களை எழுதுங்கள். தினமும் 15 நிமிடத்துக்கு எண்ணங்களையும் உணர்வுகளையும் எழுதிவருபவர்களுக்கு மன அழுத்தமும் பதற்றமும் குறைந்ததாக 2018ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறியுள்ளது. ஆனால் தினமும் எழுத வேண்டும் என்பது கட்டாயமில்லை.
சிரித்து வாழுங்கள். மனம் சோர்வாக இருக்கும்போது நகைச்சுவைக் காட்சி அல்லது திரைப்படத்தைப் பாருங்கள். அல்லது வீட்டில் ஆடிப் பாடி மகிழுங்கள். ஆடுவது மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்ற பாடல் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

