டெஸ்லா உரிமையாளர் இலோன் மஸ்க் தோற்றுவித்த செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனமான 'ஓபன்ஏஐ' தொடங்கியுள்ள செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான 'சாட்ஜிபிடி', பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தளம் தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் ஒரு மில்லியன் பேர் இதைப் பயன்படுத்தினர்.
இதனால் கூகல் தேடுதளம்தான் ஆட்டம் கண்டிருக்கிறது. 20 ஆண்டு களாக பலவற்றுக்கான விடைகளைத் திரட்டித் தரும் கூகலின் பணியை 'சாட்ஜிபிடி' மேம்படுத்திச் செய்வதாக அதைப் பயன்படுத்துவோர் கூறுகின்றனர்.
அதனால் கூகல் வரும் மாதங்களில் அதன் வர்த்தக அணுகுமுறையை மாற்றி, தானும் புதிய செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளத்தை அறிமுகம் செய்யப்போவதாக ஊடகங்கள் கூறின.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'சாட்ஜிபிடி' தளம்.
செய்திகள், வேலை விண்ணப்பங்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை அது எழுதித் தந்துள்ளது. அதைக் கொண்டு கதைகள், கவிதைகள், போன்றவையும் எழுதப்பட்டுள்ளன.
எது மனிதனின் அறிவுசார் கலைப் படைப்பு என்ற விவாதத்தையும் தளம் எழுப்பியுள்ளது.
தமிழ் முரசும் அதைச் சோதித்துப் பார்த்தது. சிங்கப்பூரின் சிறந்த இடங்கள் என்ன என்று கேள்விக்கு அத்தளம் செந்தோசா, பூமலை, கரையோரப் பூங்கா, லிட்டில் இந்தியா உள்ளிட்ட இடங்களைப் பட்டியல் இட்டது.
'சாட்ஜிபிடி' தமிழிலும் உரையாடி பதில் தந்தது. தமிழில் கவிதை பாடு என்ற கேள்விக்கு தளம் அளித்த பதில் இதுதான்:
பெரும் கடல் மீது பெம் நிலம்
பெரும் நாடு பெரும் செங்கை
பெரும் சமுதாயத்தைப் பெரும் சுவாசம்
பெரும் வடம் பெரும் தெறி
அதனிடம் மீண்டும் கவிதையைக் கேட்டதற்கு ஒழுங்கற்ற சொற்களே பதிலாக வந்தன. தமிழில் முறையான கலைப் படைப்புகளை வழங்கும் ஆற்றலைத் தளம் இன்னும் பெறவில்லை என்று இதன் வழி தெரிகிறது. தமிழ் படைப்பாளிகள் தப்பித்தனர். இப்போதைக்கு.
கூடுதல் செய்தி: கவிதா கரும்

