ஆ. விஷ்ணு வர்தினி
அன்னலட்சுமி சைவ உணவகத்தின் புதிய 'அன்னலட்சுமி கஃபே' இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஷென்டன் வேயில் உள்ள டெளன்டவுன் கேலரியின் மூன்றாம் தளத்தில் அமைந்திருக்கும் 'அன்னலட்சுமி கஃபே', இந்திய சிற்றுண்டி, பலகார வகைகளை வழங்குகின்றது.
நண்பர்கள் கூடுவதற்கும் சந்திப்பதற்குமான இடமாக அமைய விழையும் 'அன்னலட்சுமி கஃபே' அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை, "விரும்பியதை உண்ணுங்கள், விரும்பியதைக் கொடுங்கள்," என்ற முறையில் இயங்கும். அதைத் தொடர்ந்து, உணவுப் பட்டியலில் குறிக்கப்பட்ட விலைகளில் தோசை, ஊத்தப்ப வகைகள், மதிய உணவுகள் முதலியவை விற்கப்படும்.
செவ்வாய் முதல் ஞாயிறு வரை இயங்கும் இந்த 'கஃபே', மூன்று வேளைகளுக்கும் திறந்திருக்கும். ஒவ்வொரு நாளும் மக்கள் எதிர்நோக்கக் கூடிய வெவ்வேறு சிறப்பு உணவுகளும் அன்னலட்சுமியின் உணவுப் பட்டியலில் இடம்பெறுகின்றன. மதிய, இரவு வேளைகளுக்கு 'புஃபே' முறையில் இயங்கும் அன்னலட்சுமி உணவகத்தில் வழங்கப்படாத, புது உணவு வகைகளை இந்த 'கஃபே' வழங்குகிறது.
மத்திய பகுதியில் இத்தகையதொரு இந்திய 'கஃபே'யின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான ஓர் அனுபவத்தை தர முயற்சி செய்துள்ளது அன்னலட்சுமி. இந்தப் புது முயற்சி குறித்து நல்ல வரவேற்பையும் அது பெற்றுள்ளது.
செப்டம்பர் மாதம் வரை சென்ட்ரல் ஸ்குவேரில் இயங்கி வந்த அன்னலட்சுமியும் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனமும், டௌன்டவுன் கேலரிக்கு இடமாற்றம் கண்டுள்ளன. முதலாம் தளத்தில் அமைந்துள்ள அன்னலட்சுமி உணவகமானது, வரும் மாதங்களில் திறக்கப்படவுள்ளது. தொடர்ந்து, விரும்பியதைக் கொடுக்கும் முறையில் அன்னலட்சுமி உணவகம் இயங்கும். டௌன்டவுன் கேலரியின் இரண்டாம் தளத்தில் தற்போது அமைந்துள்ள ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனமும் அடுத்த மாதம் 3ஆம் தேதி அன்று திறக்கப்படவுள்ளது.

