ரச்சனா வேலாயுதம்
மலேசியாவில் மழை, வெள்ளம் காரணமாக காய்களின் வரத்து குறைந்ததால் இறக்குமதி செய்யப்படும் காய்
கறிகளின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
அதனால் சிங்கப்பூர் மளிகை வர்த்தகர்களும் காய்கறிகளின் விலைகளை வேறு வழியின்றி உயர்த்தும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
தொற்றுநோய் காலத்திற்கு பின், கடைகளுக்குச் சென்று காய்கறிகள் வாங்கும் பழக்கம் அதிகரிக்கும் இவ்வேளையில், மளிகைப் பொருள்களை
வாங்குபவர்களின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் குறைந்துள்ளது என்று 'சென்னை ட்ரேடிங் & சூப்பர்மார்ட் பிரைவேட் லிமிட்டெட்' திரு வை. இராம மூர்த்தி குறிப்பிட்டார்.
"இந்த விடுமுறைக் காலத்தில், பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விடுவதால் காய்கறிகளுக்கான தேவை குறைந்து, விநியோகம் கிட்டத்தட்ட 20 விழுக்காடு குறைந்துள்ளது.
"மேலும் விலைகள் உயர்வதால், விற்பனையும் பாதிக்கப்படுகிறது. புத்தாண்டில், காய்கறிகளுக்கான தேவை அதிகரிக்கும்போது விலை யேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது," என்றார் திரு வை.இராம மூர்த்தி.
எனினும், மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் காய்கறிகளின் விலைகள், வரி, சரக்கு கட்டணம் ஆகியவற்றால் உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இதற்குமுன் மலேசியாவில் இருந்து வரும் ஒரு கிலோ $1.50க்கு வாங்கப்பட்ட தக்காளி தற்பொழுது $2.80க்கு வாங்கப்படுவதாகவும் கூறினார்.
விலை உயர்வு காரணத்தினால் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்
வதைக் குறைத்து, சிங்கப்பூரில் விளையும் காய்கறிகள், இந்தியாவில் இருந்து வரும் காய்கறிகளை வாங்குவதாக கூறினார் ஸ்ரீ செல்வி கடையின் உரிமையாளர் திரு சோ. கோவிந்தசாமி.
"விலைகள் உயரும்போது, வேறு நாடுகளிலிருந்து வாங்க நேரிடும். அதனால் அக்காய்கறிகளின் தரம் குறைய வாய்ப்புள்ளது.
"தக்காளி போன்ற விரைவில் அழுகிப்போகும் காய்கறிகள் இந்தியாவில் இருந்து வரவழைப்பதால் நட்டம்
ஏற்படுகிறது.
"விமானத்தில் வரும் இந்த பொருள்களுக்கு ஒரு கிலோவுக்கு மூன்று வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் மலேசியாவில் இருந்து வரும் காய்கறிகளுக்கு கிலோவுக்கு பத்து காசு மட்டுமே கட்டணமாக செலுத்தப் படுகிறது.
"செய்திகள் படிப்பதால் மக்களுக்கு இந்த நிலைமை புரியும். விலை உயர்வுகளின் விழுக்காட்டை பொறுத்து காய்கறிகளின் விலையும் அதிகரிக்கின்றன. இந்த விலை உயர்
வினால் அதிக லாபம் கிடைப்பதில்லை.
சில காய்கறிகள் பெரிதாக உள்ளதாலும் விரைவாக அழுகிப்போகக்
கூடியதாக இருப்பதாலும் மற்ற நாடு
களிலிருந்து இறக்குமதி செய்வது கடினம்," என்றார் இராம மூர்த்தி.
"மலேசியாவிலிருந்து வாங்க வேண்டிய சூழ்நிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் பாலவீர டிரேடிங் நிறுவனத்தின் உரிமையாளர் திரு பாலா.
"மக்கள் விலை உயர்வை பற்றி கடைக்காரர்களிடம் புலம்புவதோடு பணம் சேமிக்க பல உத்திகளை கையாளுகிறார்கள். ஒரு கிலோ தக்காளி வாங்குவதற்கு பதில் அரை கிலோ மட்டுமே வாங்குகிறார்கள்.
"குறைந்த அளவில் வாங்குவதோடு, மலிவாக விற்கும் கடைகளை நாடி செல்கிறார்கள். அதனால் சிறிய வர்த்தகர்கள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களோடு போட்டி போட முடியாமல் தவிக்கின்றனர்," என்றார் திரு பாலா.
இந்தக் கருத்தையும் திரு இராம மூர்த்தியும் குறிப்பிட்டார். "என்டியுசி போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களின் விலைகளை வாரத்திற்கு ஒரு முறைதான் மாற்றுவார்கள். ஆனால், தனிப்பட்ட வர்த்தகர்கள் அன்று வாங்கும் விலைக்கு ஏற்ற விலையில்தான் காய்கறிகளை விற்க முடியும். இந்த உறுதி இல்லாத நிலை அவர்களுக்கு தீங்காக முடிகிறது," என்றார் திரு ராம மூர்த்தி.
"மளிகைப் பொருள்களை மலேசியாவிற்குச் சென்று வாங்குவேன். காய்
கறிகளை மட்டும் சிங்கப்பூரில் வாங்குவேன். சிங்கப்பூர் காய்கறிகளின் தரம் நன்றாக உள்ளது. ஆனால் விலைகள் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதால், நான் இந்த விலை உயர்வை கவனிக்கவில்லை," என்று கூறினார் 60 வயதாகும் திருவாட்டி கலாவதி.
நல்ல தரமுள்ள காய்கறிகளை வாங்க சிங்கப்பூரில் பல இடங்களுக்கு சொல்கிறார் இவர். பணம் சேமிக்க, அவர் தனது தள்ளுவண்டியுடன் கடை கடையாகச் சென்று, விலைகளைக் கவனித்து, பிறகுதான் காய்கறிகளை வாங்குவதாகக் கூறினார்.
விலைகளின் உயர்வை சமாளிக்கும் போது தரத்தை உன்னிப்பாக கவனிக்கத் தேவை இல்லை என்கிறார் திருவாட்டி தேவி. 58 வயதான இவர், விலை குறைந்த நேரங்களில் காய்கறிகளை வாங்கி, குளிர்சாதனப் பெட்டியின் உறைய வைக்கப்படும் பிரிவில் வைத்து பயன்படுத்துவதாகக் கூறினார்.
"சில காய்கறிகளை உறையும் பிரிவில் வைத்து, நீண்ட நாள்களுக்கு பயன்படுத்தலாம். இதனால், காய்கறிகள் வீணாவதைத் தடுக்கலாம். அதே சமயம் சத்துள்ள காய்கறிகளும் எனக்கு கிடைக்கிறது," என்று கூறினார் திருவாட்டி தேவி.
நான்கு நாள்களில் அழுகிப் போகும் காய்கறி, இலைகள், உறையும் பகுதியில் வைத்து பயன்படுத்தும்போது காய்கறிகள் வீணாவதைத் தடுக்க முடிகிறது. தரத்திலும், சுவையிலும் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிகரிக்கும் விலைவாசி, வரி உயர்வு ஆகியவற்றுடன் மலேசியாவிலிருந்து வரும் காய்கறிகளின் விலை உயர்வும் சேர்க்கப்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க, சிங்கப்பூர் மக்கள் தொடர்ந்து வெவ்வேறு புதிய வழிகளை நாடுகின்றனர்.
அதே சமயம், இந்த ஏறும் விலைகளை எதிர்த்து சிங்கப்பூர் அரசாங்கம் உதவி செய்யுமா என்று காய்கறி விற்பனையாளர்கள் காத்து இருக்கிறார்கள்.
தேக்கா வட்டாரத்தில் இருக்கும் கடையில் காய்கள் வாங்கும் தம்பதி. கோப்புப் படம்

