சான்டோஸ்: பிரேசில் காற்பந்து சகாப்தம் பெலே, தமது கடைசி ஆட்டத்தை 1977ல் விளையாடினார் - அவருடைய நியூயார்க் காஸ்மோஸ் குழுவிற்கும் அவருடைய இதயத்தில் நிறைந்திருந்த, பிரேசிலில் தமது காற்பந்து வாழ்க்கையைத் தொடங்கி, முடித்த இடமான சான்டோஸ் குழுவிற்கும் இடையிலான ஆட்டம் அது.
அந்த ஆட்டத்தில் முதல் பாதியில் காஸ்மோஸ் சார்பாகவும் இரண்டாம் பாதியில் சான்டோஸ் சார்பாகவும் பெலே விளையாடினார். இப்போது, பெலேவின் இறுதிச் சடங்கிற்காக சான்டோஸ் விளையாட்டரங்கம் தயாராகி வருகிறது.
கடந்த வியாழனன்று தமது 82 வயதில் காலமான பிரேசிலின் தேசிய புதையலாக விளங்கிய பெலேவின் நல்லுடல் நாளை காலை சான்டோசுக்குக் கொண்டு செல்லப்படும். அங்குள்ள விலோ பெல்மிரோ விளையாட்டரங்கத் திடல் நடுவே பெலேவின் நல்லுடல் தாங்கிய சவப்பெட்டி வைக்கப்படும்.
திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 24 மணி நேரத்திற்கு அவரது நல்லுடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருக்கும்.
சான்டோஸ் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக பெலேவின் நல்லுடலை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
பின்னர் அங்குள்ள 14 தளங்களைக் கொண்ட நெக்ரோபோல் எக்யூமெனிக்கா கல்லறைத் தோட்டத்தில் அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்படும். கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்த தம் இளைய சகோதரர் ஸோக்காவிற்கும் 2006ஆம் ஆண்டு இறந்துபோன தம் மகள் சாண்ட்ராவிற்கும் அருகே அவர் நல்லடக்கம் செய்யப்படுவார்.
முன்னதாக, பெலேவின் இறப்பை அடுத்து, அவருக்கு மூன்று நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று பிரேசில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஐரோப்பிய நாடுகள் மரியாதை
சுவிட்சர்லாந்தின் ஸூரிக் நகரில் அமைந்துள்ள அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைமையகத்தில் அனைத்து உறுப்பு நாடுகளின் கொடிகளும் நேற்று முன்தினம் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
இருபதாம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த காற்பந்து ஆட்டக்காரர் என அறிவித்து, ஃபிஃபா பெலேவைச் சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றுமுறை உலகக் கிண்ணம் வென்ற ஒரே ஆட்டக்காரர் அவர்தான்.
இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் முதல்நிலை காற்பந்து லீக் போட்டிகளில் அடுத்த சுற்று ஆட்டங்களின்போது பெலே நினைவுகூரப்படுவார் என்று அந்நாடுகளின் காற்பந்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஆட்டம் தொடங்குமுன் ஒரு நிமிடம் கரவொலி எழுப்பப்படும் என்று இங்கிலாந்தும் பிரான்சும் அறிவித்துள்ளன. அதுபோல, இத்தாலியிலும் ஸ்பெயினிலும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

