கொட்டாவியும் கண்ணீரும் தொடர்ந்து வந்தால்

3 mins read

சில நேரங்­களில் தொடர்ந்து கொட்­டாவி வந்­து­கொண்டே இருக்­கும். இது அனிச்­சை­யான செயல். இதற்கான முழுமையான காரணங்கள் இன்னும் கண்டறியப் படாவிட்டாலும், முக்­கிய கார­ணம் உடல் நிலை மிக­வும் சோர்­வாக இருப்­ப­தே என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.

உட­லுக்­குத் தேவை­யான உயிர் வாயு (ஆக்­சி­ஜன்) போதுமான அளவு கிடைக்­கா­த­போது மூச்­சு­வி­டு­வது மெது­வாக இருக்­கும். சுறு­சு­றுப்பு குறைந்து சோர்வு உண்­டா­கும்.

நாசித் துவா­ரங்­கள் வழியே உட்­செல்­லும் உயிர் வாயு போது­மா­ன­தாக இல்­லாத நிலை­யில், வாயா­லும் உயிர் வாயுவை உள்­ளி­ழுக்க கொட்­டாவி ஏற்­ப­டு­கிறது. இத­னால், உயிர்­வாயு உட­லுக்கு கிடைப்­ப­து­டன், ரத்­தத்­தில் இருக்­கும் அதி­கப்­ப­டி­யான கரி­ய­மில வாயு (கார்­பன்-டை-ஆக்­சைடு) உட­லில் இருந்து வெளியே­றும்.

சுற்­றுச்­சூ­ழ­லி­லுள்ள வெப்ப அளவு உட­லின் வெப்­பத்­தை­விட அதி­க­மாக இருந்­தால் கொட்­டாவி வரும் வாய்ப்பு குறைவு என்­பது பிரின்ஸ்­டன் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர் ஆண்ட்ரூ கேளப்­பின் ஆய்வு. வெப்ப அளவு கொட்­டாவி ஏற்­ப­டு­வ­தற்­கான காரணி என்­றும், இது மூளை­யின் வெப்ப அளவை நெறி­மு­றைப்­ப­டுத்­தும் ஒரு முறை­யாக இருக்­கக்­கூ­டும் என்­ப­தும் இவ­ரது ஆய்­வின் முடிவு.

கொட்­டாவி விடும்­போது மேல்­வாய், கீழ்­வாய் இரண்­டும் அக­லத் திறக்­கப்­ப­டு­வ­தால் மூளைக்­குச் செல்­லும் ரத்­தத்­தின் அளவு அதி­க­ரிப்­ப­தா­லும், ஆழ­மாக மூச்சு விடும்­போது குளி­ரான காற்று உள்சென்று வெப்­ப­மான காற்று வெளியேறுவதாலும் மூளை குளிர்­விக்­கப்­ப­டு­கிறது.

கண்களைக் காக்கும் கண்­ணீர்

சில­ருக்கு கொட்­டாவி விடும்­போது கண்­களில் நீர் வடி­யும்.

அதி­கப்­ப­டி­யான அழுத்­தம் கார­ண­மாக கண்­ணீர் சுரப்­பி­கள் தூண்­டப்­பட்டு கண்­கள் மேற்­ப­கு­தி­யின் ஓரத்­தில் நீர் வரு­கிறது.

கொட்­டாவி விடும்­போது கண்­களை இறுக்கி மூடு­வ­தால் கண்­ணீர் சுரப்­பி­கள் அழுத்­தம் ஏற்­பட்டு கண்­க­ளின் ஓரத்­தில் நீர் கசி­கிறது.

கண்­க­ளின் இமை­களில் மிக­வும் நுண்­ணிய பல கண்­ணீர் சுரப்­பி­கள் அமைந்­துள்­ளன. கண்­க­ளின் பாது­காப்­பிற்­கா­க­வும், கண்­க­ளின் அசை­விற்கு இத­மாக இருக்­க­வும் இச்­சு­ரப்­பி­க­ளி­லி­ருந்து எப்­போ­தும் நீர் கசிந்து கொண்­டே­யி­ருக்­கும். கண்­களில் தூசி முத­லி­யவை விழுந்­தால் அவற்றை உடனே அகற்ற கண்­ணீர் அதி­மாகக் கசி­கிறது.

துக்­கமோ, ஆனந்­தமோ அதி­க­மா­கும்­பொ­ழுது இது அதி­க­மா­கப் பெரு­கு­கிறது. இப்­படி அதி­க­மா­கப் பெரு­கும் கண்­ணீர், கண்­க­ளின் இமை­களில் தங்கி வெளியே சிந்­தி­யும், மூக்­கின் அரு­கி­லுள்ள துவா­ரங்­கள் வழியே மூக்­கி­னுள் சென்­றும் வெளி­யா­கிறது.

இயல்­புக்கு மாறான கண்­ணீர்

பிறந்த குழந்­தைக்­கும் சில­நேரம் இயல்­புக்கு மாறா­கக் கண்­ணி­லி­ருந்து நீர் வடி­ய­லாம். கண்­ணில் ஏற்­பட்ட நோய்த்­தொற்று கார­ண­மாக இருக்­க­லாம். கண்­ணீர்ப்­பை­யில் ஏற்­பட்ட அடைப்­பும் கார­ண­மாக இருக்­கலாம்.

மாண­வர்­க­ளுக்கு கண்­ணில் நீர் வடி­வ­தற்கு பார்­வைக் குறை­பாடு கார­ண­மாக இருக்­க­லாம். கண்­ணின் இமை­யோ­ரங்­களில் நோய்த்­தொற்று இருந்­தா­லும் நீர் வர­லாம். சில­ருக்­குக் கண் இமை­யோர முடி, கண்­ணுக்கு உட்­பு­ற­மாக வளைந்து விழிக்­கோ­ளத்தை உர­சு­வ­தன் மூல­மும் நீர் வரும்.

கணினி, தொலைக்­காட்சி, கைப்­பேசி போன்ற மின்­சா­த­னங்­களை நீண்­ட­நே­ரம் பயன்­படுத்­தும்­போது கண் விரை­வா­கக் களைத்து கண்­களில் அழுத்­தம் ஏற்­படும். இதனால் கண்­ணி­லி­ருந்து நீர் வடி­ய­லாம்.

கண் அறு­வை சிகிச்சைக்கு பின்னர் கண்­ணி­லி­ருந்து நீர் வடிய வாய்ப்பு உண்டு. நோய்த்­தொற்றோ அல்­லது அறு­வைக்­குப் போடப்­பட்ட தைய­லின் எச்­சங்­களோ இருந்­தா­லும் நீர் வடி­ய­லாம்.

அதிக ஒளி­யைப் பார்த்­தா­லும் சில­ருக்­குக் கண்­ணீர் அதி­க­மாக வர­லாம்.

சில­ருக்­குப் பயம் கார­ண­மா­கக் கண்­ணீர் வரும். இன்­னும் சில­ருக்கு எந்­தக் கார­ண­மும் இன்றி கண்­ணீர் வந்­து­கொண்­டே­யி­ருக்­கும். அவர்­கள் தீவிர மனச்­சோர்வு, மனச்­சி­தை­வால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.

வெள்­ளெ­ழுத்­துப் பிரச்­சி­னைக்­குக் கண்­ணாடி போடா­மல் கண்­ணைக் கஷ்­டப்­ப­டுத்­திப் படிக்க முற்­ப­டும்­போது நீர் வர­லாம்.

கொட்­டாவி அல்­லது நீர் வடி­யும் கண்­கள் பொது­வாக மருத்­து­வப் பிரச்­சனை அல்ல. எனி­னும், ஒருவர் கண் வலி அல்­லது வறட்சி, அடிக்­கடி கட்­டுப்­பா­டற்ற கொட்­டாவி, அல்­லது கடு­மை­யான சோர்வு அல்­லது தூக்­க­மின்மை ஆகி­ய­வற்றை அனு­ப­வித்­தால் மருத்­து­வரை நாட வேண்­டும்.