உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொறுத்தும்தான் இருக்க வேண்டும்.
தண்ணீர்: ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிப்பதே நல்லது. குளிர்ந்த நீருக்கு அமிலத்தைக் குறைக்கும் தன்மை அதிகம். நீர் அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தை சமன்செய்து வயிற்றை சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தை வெகுவாக குறைக்க முடியும். முக்கால் லிட்டர் நீரை முழுமையாக குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராக பிரித்து குடிக்கலாம்.
வெந்தயம்: நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு அருமருந்து. உடல் சூட்டை தணிக்கும். வெந்தயத்தை முதல் நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஊற வைக்காமல் அப்படியே சாப்பிடுவது செரிமானத்தை தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.
வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் உடனடியாக சளி பிடிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. சில நேரங்களில் வயிற்று போக்கிற்கும் வழிவகுத்துவிடும்.
அருகம்புல்: பைகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல்லின் தண்டு மட்டும்தான் மருத்துவகுணம் கொண்டது. இலையின் ஓரங்களில் காணப்படும் வெண்மையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால் வயிற்று போக்கை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. அருகம்புல் செடியை வீட்டிலேயே அரைத்து சாறு எடுத்து வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.
இஞ்சி: இஞ்சியில் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு சாறு எடுத்து அதோடு தேன் கலந்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன், நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

