உங்களின் ஒட்டுமொத்த நலனுக்கு எது முக்கியம்: நீங்கள் செய்யும் வேலையா, அல்லது உங்களுடன் வேலை செய்யும் கூட்டமா? 80 ஆண்டுகளுக்கு மேலாக நீளும் ஓர் ஆய்வை மேற்கோள் காட்டும் புதிய புத்தகம் ஒன்றில், நாம் நினைப்பதைவிட வேலையிட உறவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வில் பங்கேற்போரை வாழ்நாள் முழுக்கப் பின்தொடர்ந்துள்ளனர்.
பெரும்பாலும் 'ஹார்வர்ட்' பல்கலைக்கழக மாணவர்களாகவும் குறைந்த வருமானப் பிரிவினராகவும் உள்ள இந்த ஆய்வு பங்கேற்பாளர்களை ஆய்வாளர்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பேட்டி காண்பதும் கேள்விகளுக்குப் பதில் எழுதவும் வைக்கின்றனர். தற்போது ஆய்வின் பங்கேற்பாளர்களுடைய பிள்ளைகளும் ஆய்வில் பங்கேற்கின்றனர்.
நமது வாழ்வாதாரத்திற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை மட்டும் கவனிக்காமல் யாருடன் அதைச் செய்கிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
"நாம் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பாலான நேரத்தை வேலையில்தான் செலவிடுகிறோம். எங்களின் ஆய்வுப் பங்கேற்பாளர்களைப் பல ஆண்டுகளாக நாங்கள் பின்தொடர்ந்ததிலிருந்து இப்போது அவர்களின் பிள்ளைகளைப் பின்தொடர்வது வரை நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால் வேலையிடத்தில் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகள் மிக முக்கியம் என்பதே. பலருக்கும் முக்கியமான ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தன்மை, நாம் செய்யும் வேலைக்கு உண்டு," என்று ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான மனோதத்துவ நிபுணர் மார்க் ஸ்குல்ஸ் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வின் மூலம் 'ஆக மகிழ்ச்சியான மனிதர்' எனப் பங்கேற்பாளர்களில் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். ஆனால், இவர் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற தம் கனவை அடையவில்லை. அதற்குப் பதிலாக ஆசிரியர் ஆனார்.
திட்டமிட்டவாறு நடக்காமல் போனதுடன் தந்தையின் மரணம், தாயாருக்கு உடல்நலக் குறைவு என்றிருந்த அந்த 'ஆக மகிழ்ச்சியான மனிதர்', தம் மாணவர்களுடனும் சக ஆசிரியர்களுடனும் ஏற்படுத்திக்கொண்ட உறவால் மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டியதாக ஆய்வு கண்டறிந்தது.
இதனால், 'லியோ' என்ற அந்த நபர், பதவி உயர்வைக் கூட பலமுறை நிராகரித்துள்ளார்.
பணம் முக்கியமல்ல என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அடிப்படை வசதிகளைத் தரும் நிதி நிலையை ஒருவர் பெற்ற பிறகு, மகிழ்ச்சிக்கு பணம் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை என்று புத்தகத்தில் எழுதிய டாக்டர் ஸ்குல்ஸ் மற்றும் மனநல மருத்துவர் ராபர்ட் வால்டிங்கர் குறிப்பிடுகின்றனர்.
லியோ எழுத்தாளர் ஆகியிருந்தால் பல நாட்களைத் தனிமையில் கழித்திருப்பார். ஆனால், வகுப்பறைகளிலும் ஆசிரியர் அறைகளிலும் அவர் பெற்ற அனுபவங்களே அவரின் அன்றாட வேலை அனுபவத்தை மெருகூட்டி அவருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கின்றன என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மற்றவர்களுடன் உறவாடும் வாய்ப்பு எப்போதுமே நமக்கு இருக்கிறது. உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது சுலபமல்ல. அந்த உறவுகளைக் கவனிப்பது முக்கியம். நட்பில் எப்போது எது நடக்கும் என்று முன்னுரைக்க முடியாததால் அதில் ஆபத்தும் சிக்கலும் இருக்கலாம். இருப்பினும் வேலையிடத்தில் நமது நேரத்தை இன்பமாகக் கழிக்கவும் மகிழ்ச்சியை உணரவும் அந்த நட்பை நாடுவது அவசியம்," என்கின்றனர் நூலாசிரியர்கள்.
செய்தி: புளூம்பெர்க்,
படம்: வெக்டீசி

