சென்னையில் தொடங்கியுள்ள புத்தகக் கண் காட்சியில் இடம்பெற்ற சிங்கப்பூரின் காட்சிக் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
மூத்த பெண் எழுத்தாளர் திருவாட்டி கமலாதேவி அரவிந்தனின் செம்பவாங் நாவல், சிங்கப்பூரின் முதல் பெண் நாவலாசிரியை திருவாட்டி சூர்ய ரத்னாவின் அறம் சிறுகதைத் தொகுப்பு, திரு. நா. ஆண்டியப் பனின் விண்ணில் வீடு கட்டி எனும் பயணக் கட்டுரை நூல் ஆகியவை அறிமுகம் கண்டன.
அவற்றை முறையே லேனா தமிழ்வாணன், நீதியரசர் மூ. புகழேந்தி, பாரதி கிருஷ்ண குமார் ஆகியோர் சிறப்பாக அறிமுகம் செய்தனர்.
தாங்கள் கேள்விப்பட்டிருந்த கம்பத்து வாழ்க்கையைத் திருவாட்டி கமலாதேவி கண்முன்னே கொண்டுவந்து காட்டி இருக்கிறார் என்று லேனா தமிழ்வாணன் புகழாரம் சூட்டினார்.
களப்பணிகள் செய்து இந்த நாவலை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
அறம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறு கதைகள் அனைத்தும் மிகச் சிறப்பாக வடி வமைக்கப்பட்டுள்ளன என்றும் சூர்ய ரத்னாவின் சிறுகதைகள் பல நாடுகளைச் சம்பந்தப் படுத்தி எழுதப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றும் அந்நூலை அறிமுகப்படுத்திய நீதியரசர் புகழேந்தி குறிப்பிட்டார்.
நா. ஆண்டியப்பனின் விண்ணில் வீடு கட்டி நூலை அறிமுகம் செய்த பாரதி கிருஷ்ணகுமார், நேர்மறைச் சிந்தனையுடன் நூல் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பயணக்கட்டுரை நூலைத் தமிழ் இலக்கியத்துடன் இணைத்து எழுதியிருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
இறுதியில் திருவாட்டி கமலாதேவி, திருவாட்டி சூர்ய ரத்னா, நா. ஆண்டியப்பன் ஆகியோர் ஏற்புரை ஆற்றினர்.
ஏற்புரையுடன் இணைந்து நன்றியுரையும் ஆற்றிய திரு. ஆண்டியப்பன், தாம் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு அறிமுகப் பணியைச் செவ்வனே செய்த லேனா தமிழ்வாணன், நீதியரசர் புகழேந்தி, பாரதி கிருஷ்ணகுமார் ஆகிய மூவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் துணைத் தலைவர் திரு. சு. முத்துமாணிக்கம் வரவேற்புரை ஆற்றி, நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். (தகவல்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்)

