சுற்றியிருந்த ஏறத்தாழ 30 பேர் இமை கொட்டாமல் பார்த்திருக்க, தமது 18 மாத உழைப்பில் உருவான சித்திரத்தை தியோங் பாரு சமூக மன்றத்தில் நேற்று நிறைவு செய்தார் சிங்கப்பூர் ஓவியர் யிப் இயூ சோங்.
சிங்கப்பூர் காட்சிகளை உள்ளடக்கிய அந்த ஓவியம் 60 மீட்டர் நீளம் கொண்டது. அதாவது ஐந்து இரண்டு மாடி பேருந்துகளை ஒன்றாக நிற்க வைத்தால் உள்ள நீளம் அது. 54 வயது திரு யிப், வரைந்துள்ள ஆக நீளமான ஓவியமும் அதுதான். அவர் வரைவதற்கு மிக நீண்டகாலம் எடுத்துக்கொண்ட ஓவியமும் அதுதான்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திரு யிப் ஓவியத்தைத் தொடங்கினார். இடையிடையே மற்ற ஓவியப் பணிகளையும் அவர் மேற்கொண்டார்.
ஓவியத்துக்கு அவர் இன்னமும் பெயர் சூட்டவில்லை. ஆனால் இவ்வாண்டு பிற்பகுதியில் அதைக் காட்சிக்கு வைக்க அவர் திட்டமிடுகிறார்.
27 கான்வஸ் திரைகளைச் சேர்த்து திரு யிப் வரைந்த ஓவியம், 1970களிலும் 1980களிலும் இருந்த சிங்கப்பூரைக் கண்முன் கொண்டு வந்துள்ளது. தமது இளமைக் கால நினைவுகளைக் காட்சிப் படுத்தி உள்ளதாக அவர் கூறினார்.
பரபரப்பான பணப்பரிவர்த்தனை வணிகர்களும் நினைவுப்பரிசுகளை விற்ற கடைகளும் பரபரப்பாக இயங்கிய ராஃபிள்ஸ் பிளேசின் சேஞ் ஆலி, தெக்கோங் தீவில் உள்ள அடிப்படை ராணுவப் பயிற்சி முகாமின் ஒரு படுக்கை அருகே நிற்கும் பயிற்சியாளர், என சிங்கப்பூருக்கே சொந்தமான காட்சிகள் அவரது கைவண்ணத்தில் ஓவியமாகின.
நியூ பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள கொங் சாவ் வுய் கூன் குலமரபு சங்கக் கட்டடத்தின் மேலே சிங்க நடனமணிகளும் தற்காப்புக் கலை நிபுணரும் பயிற்சி செய்யும் காட்சியை வரைந்து திரு யிப் ஓவியத்தை நேற்று நிறைவு செய்தார்.
நீளமான சீனப் பாரம்பரிய சுருள் தாள்களை நினைவுபடுத்தும் வகையில் சிங்கப்பூர் பாணியில் ஓவியத்தை வரையும்படி தமது நண்பர் ஒருவர் ஊக்குவித்ததாக திரு யிப் கூறினார்.
சிங்கப்பூர் காட்சிகளைக் கொண்ட ஓவியம் சிங்கப்பூரர்களுக்கு நெருக்கமாக இருக்கும் என்று அவர் நினைத்தார். தமது கற்பனையில் தோன்றிய கதைகளை ஓவியமாக வடித்ததாகவும் அவை உண்மையில் சித்திரிப்புகள் என்றும் திரு யிப் குறிப்பிட்டார்.

