மோனலிசா
பரபரப்பான வாழ்க்கை முறையால் நம் வாழ்வில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களில் அபாயகரமான ஒன்று துரித உணவுவகைகளை உட்கொள்ளும் பழக்கம்.
பார்ப்பதற்குப் பசியைத் தூண்டும் விதத்திலும் சுவைப்பதற்கு ருசியாகவும் இருக்கும் பீட்சா, பர்கர், பொரித்த இறைச்சி போன்ற பல உணவுவகைகளை அடிக்கடி உட்கொள்கிறோம்.
ஆனால் இந்த உணவு வகைகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியவை.
அதில் சேர்க்கப்படும் நிறக் கலவைகளும் 'அஜினமோட்டோ' போன்ற சுவையூட்டிகளும் நாளடைவில் மனிதர்களுக்கு வயிற்றுப்புண், புற்றுநோய், உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, இதய நோய் போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
பெரியவர்களைவிட சிறுவர்களே இவ்வகை உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். பிள்ளைகளின் வற்புறுத்தலின் பேரில் பெற்றோரும் அடிக்கடி இணையத்திலும் நேரடியாகக் கடைகளுக்குச் சென்றும் அவற்றை வாங்கித் தருகின்றனர்.
வளரும் பருவத்தில் இவ்வகை உணவுப் பழக்கங்கள் பிள்ளை களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் என்பதை உணர்தல் அவசியம்.
கூடுமானவரை வீட்டிலேயே சமைத்த உணவைச் சாப்பிடுவதே உகந்தது என்பது நிபுணர்களின் ஆலோசனை.
வீட்டிலே விதவிதமான பலவகை பாரம்பரிய உணவுகளை ருசியுடன் தயாரித்து உண்ணலாம். பிள்ளைகளுக்கும் பாரம்பரிய உணவுவகைகளை அறிமுகப் படுத்த அது வாய்ப்பு தரும்.
அத்துடன், சிறுவயதிலேயே துரித உணவுகள் உடல்நலத்திற்கு அளிக்கும் தீங்குகளையும் விளக்கிக்கூறி அவர்களைப் பக்குவப்படுத்தலாம்.
"துரித உணவினை தினந் தோறும் உட்கொள்வதன் மூலம் நாளடைவில் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.
குறிப்பாக, பதின்ம வயதுப் பெண்கள் இந்த உணவுவகைகளை அதிகம் உட்கொள்வது பூப்படைதல், மாதவிடாய் போன்றவற்றையும் பாதிக்கும்," என்று கூறினார் பொதுநல மருத்துவரான அஸ்வின் வாரியர்.
மேலும், உணவை சரியான அளவில் சரியான நேரத்தில் சாப்பிடப் பழகிக் கொள்ளவேண்டும் என்றும் பசிக்கும்போது மட்டும் தேவைக்கேற்ப உண்பதை விடுத்து பொழுதுபோக்கிற்காகவும் ருசிக்காகவும் உண்பதைத் தவிர்ப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
தனியார் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரியும் சரஸ்வதி ராஜேந்திரனுடைய 8 வயது மகனும் 6 வயது மகளும் ஓராண்டுக்கு முன்னர் ஒருமுறை துரித வகை உணவினை உண்டனர். ருசி பிடித்துப் போகவே அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர்கள் தாயாரிடம் அடம்பிடிக்க ஆரம்பித்தனர். மாதத்திற்கு இரு முறை என்று கட்டுப்படுத்தியபோதும் ஒவ்வொரு முறையும் அந்நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.
பிறகு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பிள்ளைகளுக்கு இவ்வகை உணவு வகைகள் ஏற்படுத்தும் உடல் கோளாறு கள் பற்றிய காணொளிகளைக் காண்பித்தார் இந்த தாயார்.
மேலும், பொதுநல மருத்துவரிடம் தமது பிள்ளைகளை அழைத்துச் சென்று நேரடியாக மருத்துவரே இதன் ஆபத்துகளை விளக்குவதைக் கேட்கும்படி செய்தார்.
பல நாள் இம்முயற்சியில் ஈடுபட்டதன் பலனாய் தற்போது தமது பிள்ளைகளே இதுபோன்ற உணவுகளின் தீங்குகளை நண்பர்களுக்கு விளக்குகின்றனர் என்று சரஸ்வதி மகிழ்வுடன் கூறுகிறார். கூடுதலாக இவர் பல பாரம்பரிய உணவுவகைகளையும் அன்றாடம் சமைக்கத் தொடங்கி இருக்கிறார்.
monolisa@sph.com.sg

