சாக்லேட்டை ஏன் பலருக்கும் பிடிக்கிறது என்ற ரகசியத்தைக் கண்டறிந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சாக்லேட் ஒருவது நாவில் கரைவதில்தான் அந்த ரகசியம் அடங்கியுள்ளதாக பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஏசிஎஸ் செயல்முறை மூலப்பொருள்கள் என்ற சஞ்சிகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
சாக்லேட் சாப்பிடும் முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர்கள் பிரித்து ஆராய்ந்தனர்.
சாக்லேட்டின் வெளிப்படலங்களில் உள்ள கொழுப்புகள் நாவிலுள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் பட்டுக் கரையும்போது உள்ள இழைவும் அதில் பெறும் உணர்வும்தான் சாக்லேட் ஒருவருக்கு மிகவும் பிடிப்பதற்கு முக்கிய காரணம். அதுவே சாக்லேட் சாப்பிடும்போது நிறைவடையும் உணர்வைத் தருவதாக ஆய்வாளர்கள் கூறினர்.
சாக்லேட்டின் உட்படலங்களில் உள்ள கொழுப்பு நாவில் படும்போது அச்சுவையால் புலன்களுக்குப் பெரிய தாக்கம் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வின் விளைவாக புதிய வகை சொகுசு சாக்லேட்டைத் தயாரிக்க ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். இந்த வகை சாக்லேட்டில் மேற் படலத்தில் மட்டும் அதிகக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் சாக்லேட்டின் உள்பகுதிகளில் மிகவும் குறைவான கொழுப்பு சேர்க்கப்படும்.
அதற்காக நாவைப் போன்றே இருக்கும் செயற்கை முப்பரிமாணக் கருவியை ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர். நாவில் உள்ள சுவைகள் அக்கருவியில் சேர்க்கப்பட்டிருக்கும். அதில் கருநிற சொகுசு சாக்லேட்டை வைத்து ஆய் வாளர்கள் அதன் சுவையைச் சோதித்து வருகின்றனர்.
இதன் வழி, உடலுக்கு அதிகத் தீங்கு ஏற்படுத்தாத சாக்லேட்டை உருவாக்க ஆய்வாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் அதற்குக் காலம் பிடிக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போது சாக்லேட் சாப்பிட விரும்புவோர் 'மில்க்' சாக்லேட், இனிப்பு மேற்பரப்பு உள்ள சாக்லேட் ஆகியவற்றைத் தவிர்த்து, கருநிற சாக்லேட்டைத் தேர்வு செய்வது உடலுக்கு நல்லது.

