கருணாநிதி துர்கா
சுற்றுப்புறம், பல்லுயிர்ச்சூழல் ஆகியவற்றுடன் மனநலத்தையும் பாதுகாக்க உதவுகிறது தோட்டக்கலை. சிங்கப்பூர்வாசிகள் பலரும் இதில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். வாடகைக்கு இடம் எடுத்து உற்சாகத்துடன் பயிரிடும் மூவர் அதுகுறித்துப் பகிர்ந்துகொண்டனர்.
'கிரீன் அப்' நிறுவனத்தை 2019ல் தோற்றுவித்த லலிதா நாயர், 61, தோட்டக்கலை பற்றி இளம் வயதினருக்கு கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்றும் இயற்கையைப் பாதிக்கும் எதையும் செய்யக் கூடாது என்றும் குடும்பப் பெரியவர்கள் சொல்வதைக்கேட்டு வளர்ந்தவர் திருமதி லலிதா.
சிறுவயதில் பாட்டியின் தோட்டத்தை ரசித்த இவர், அதிலிருந்த மரங்கள், செடிகொடிகள், அவற்றின் பயன்களைப் பற்றி பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டார்.
இதனால் இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் மதிப்பளிக்கும் எண்ணம் இளம் வயதிலேயே பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டது என்கிறார் லலிதா.
நீடித்த நிலைத்தன்மை மிக்க வாழ்க்கைமுறை தொடர்பான பயிலரங்குகளை இவர் நடத்தி வருகிறார்.
கிராஞ்சி கெலப் பண்ணையில் 8,000 சதுர அடி நிலத்தை வாடகைக்கு எடுத்து 'நேச்சர் நூக்' எனும் தோட்டத்தை அமைத்துள்ளார். அங்கு, 80க்கு மேற்பட்ட மூலிகைகள், செடிகொடிகள், மரங்கள் ஆகியவற்றை வளர்க்கிறார் லலிதா.
குடும்பத்தினரின் ஊக்கத்தாலும் உதவியாலும் தோட்டக்கலையில் ஈடுபடும் அதிரா மணிகண்டன், 17, தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கணக்கியல் பட்டயப் படிப்பை மேற்கொள்கிறார்.
நான்கு ஆண்டுகளாக தோட்டக்கலையில் அதிக ஈடுபாடு காட்டி வரும் இவர் வீட்டில் செடி வளர்ப்பதோடு ஜூரோங் லேக் கார்டன் பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்பில் மிளகாய், வெண்டைக்காய் போன்ற செடிகளைப் பயிரிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற பயிர்கள் பல இருக்கின்றன. அவற்றைப் பயிரிடுவதால் இங்கும் வேளாண்மைத் துறை தழைக்க இயலும் என்றார் அதிரா.
தோட்டக்கலை குறித்து நாளுக்கு நாள் புதியனவற்றைக் கற்றுக்கொள்வதாகக் கூறுகிறார் திருமதி ஸ்ரீஜா நாராயணமூர்த்தி, 41.
கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசிக்கும் இவர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணிபுரிகிறார்.
வீட்டு வாசலில் முடிந்த அளவு முல்லை, செம்பருத்தி, ரோஜா எனப் பலவகையான செடிகளை பூந்தொட்டிகளில் வளர்க்கும் இவர், தேசியப் பூங்காக் கழகத்தின் நில ஒதுக்கீட்டின் மூலம் ஜூரோங் லேக் கார்டன்சில் வெவ்வேறு பழங்களையும் காய்கறிகளையும் பயிரிட்டுள்ளார்.
தோட்ட வேலை மனவுளைச்சலை நீக்கி மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறுகின்றனர் லலிதா, அதிரா, ஸ்ரீஜா மூவரும்.

