கருணாநிதி துர்கா
நுயூட்ரி கிரேடு (Nutri-grade) கட்டாய ஊட்டச்சத்து முத்திரைகள் சிங்கப்பூரின் சில்லறை வர்த்தகங்களில் விற்கப்படும் பானங்களில் இருக்கவேண்டும் என்ற திட்டத்தை சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
நான்கு நிறக் குறியீடுகளுடன் 'ஏ', 'பி', 'சி', 'டி' ஆகிய தரங்களை கொண்டிருக்கும் இந்த முத்திரை சர்க்கரை, கொழுப்பு அளவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படும்.
'சி', 'டி', தரங்களிலான பானங்களுக்கு நுயூட்ரி கிரேடு முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'டி' தரத்திலுள்ள பானங்களுக்கு விளம்பரக் கட்டுப்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டிறுதியில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் வாடிக்கையாளர்களின் வாங்கும் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
"வாடிக்கையாளர்கள் அதிக அளவு சர்க்கரையும், கொழுப்பும் உள்ள பானங்களை அடையாளங்கண்டு மேலும் தகவலறிந்து ஆரோக்கியமான பானங்களைத் தேர்ந்தெடுக்க இத்திட்டம் உதவும்," என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் அறிவித்தது.
"வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியாக வெளியிடப்படும் விளம்பரங்களின் தாக்கத்தைக் குறைப்பதும் தொழில்துறை மறுசீரமைப்புக்குத் தூண்டுவதும் அந்த விளம்பரத் தடைகளின் நோக்கமாகும்," என்றும் அறிவிக்கப்பட்டது.
"பெரும்பாலும் நான் வாங்கும் பானங்கள் 'ஏ' தரம் கொண்டவையாகத்தான் இருக்கும். அதோடு, என் பிள்ளைகளிடமும் இத்தரத்தைக் கருத்தில்கொண்டு பானங்களை வாங்கவேண்டும் என நான் வலியுறுத்துவதுண்டு," என்று கூறினார் திருமதி அனுபாமா பாலசுப்ரமணியன், 42.
"சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருக்கும் பானங்களை மட்டும்தான் உட்கொள்வேன் என்பதில்லை. இருப்பினும், தரக் குறியீடுகளின் வழியாக நான் உட்கொள்ளும் பானங்கள் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்று என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது," என்று கூறினார் மாணவி மகதி திருப்பதி.
இவ்வாறு பொதுமக்களின் கருத்துகள் ஒருபுறம் இருக்க, பானங்களை விற்கும் கடைகளின் உரிமையாளர்களும் இத்திட்டம் கொண்டு வரக்கூடிய மாற்றங்களை பற்றிக் கூறினர்.
"வாடிக்கையாளர்களில் பலர் இந்த முத்திரைகளைக் கவனித்து வாங்குவதுண்டு. ஊட்டச்சத்து முத்திரை மட்டுமல்லாது 'ஹெல்த்தியர் சாய்ஸ்' முத்திரையையும் பார்த்து வாங்குகின்றனர்," என்று செல்வி ஸ்டோர்சில் பணிபுரியும் திரு கோவிந்தசாமி, 50, கூறினார்.
"இத்திட்டம் நடப்பிற்கு வந்து வெகுநாட்கள் ஆகாததால் இதுவரை வாடிக்கையாளர்கள் பானங்களைத் தேர்வு செய்வதில் பெரிய மாற்றம் தெரியவில்லை. ஆனால், வரும் நாட்களில் நிச்சயம் வாடிக்கையாளர்களின் வாங்கும் போக்கில் மாற்றம் தெரியும் என எதிர்பார்க்கிறேன்," என்று அவிக்னா ஸ்டோரின் முதலாளி திருமதி விஜயலட்சுமி, 51, கூறினார். இத்திட்டம் இதுவரை பொட்டலமிடப்பட்ட பானங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 2023ஆம் ஆண்டில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பானங்களுக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
"நாங்கள் உடனுக்குடன் தயாரிக்கும் பானங்களில் எந்தவித பதப்படுத்தி வைக்கப்படும் சரக்குகளும் சேர்ப்பதில்லை. புதிதாக தயாரிக்கப்பட்ட பானங்கள் என்றாலே வாடிக்கையாளர்கள் அவற்றை தயக்கமின்றி வாங்குவர்," என்று சையது ஆல்வி சாலையில் இருக்கும் சகுந்தலாஸ் உணவகத்தின் முதலாளி, திரு பாலாஜி, 43, கூறினார்.
"ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொண்டவர்கள் தங்களது உணவுமுறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவர். அவ்வாறான வாடிக்கையாளர்கள் சாப்பாட்டு வேளையில் வாங்குவதை, உட்கொள்வதைப் பற்றித் தெரிந்துகொள்ள இத்திட்டம் நிச்சயம் உதவும்," என்று 'ஸ்பிரிங்லீஃப் பரோட்டா பிளேஸ்' நிறுவனத்தின் நிறுவனர் திரு சு வி குணாளன், 48, கூறினார். இத்திட்டம் சிங்கப்பூரர்கள் உட்கொள்ளும் சர்க்கரை அளவில் மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்பிக்கை கொண்டுள்ளது சுகாதார அமைச்சு.

