ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதில் பிற இன ஆசிரியர்களும் மாணவர்களுக்கு கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பொங்கல் விழா கொண்டாடப்படுவதன் நோக்கம், அதன் மரபுசார்ந்த தகவல்கள் போன்றவற்றை ஆசிரியர்களும் மாணவர்களும் அறிந்துகொண்டனர்.
பொங்கல் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளும் இதன்வழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. கோலமிடுதல் வண்ணமிடுதல் எனப் பல்வகை நடவடிக்கைகளிலும் மாணவர்கள் பங்கேற்றுத் தமிழர் மரபும் பண்பாடும் சார்ந்த பல செய்திகளை அறிந்துகொண்டனர். மாணவர்களுக்கு அனுபவக் கல்வியை வழங்குவதற்கான தளங்களில் பொங்கல் விழாவும் முக்கியப் பங்கு வகிப்பதால் பள்ளி ஆசிரியர்கள் ஆண்டுதோறும் இந்த விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
பிறகு, உயர்நிலை இரண்டைச் சேர்ந்த மாணவர்கள், மேற்கு வட்டார 3 குழுமப் பள்ளிகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் விழா' கற்றல் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் ஜூரோங் மேற்கு உயர்நிலைப்பள்ளி, பூன் லே உயர்நிலைப்பள்ளி, ஜூயிங் உயர்நிலைப்பள்ளி வெஸ்ட் வுட் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த உயர்நிலை இரண்டு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் 'லிஷா' என்னும் அமைப்பால் லிட்டில் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா கொண்டாட்டங்களையும் நடவடிக்கைகளையும் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், அங்குக் காட்சிக்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளையும் ஆடுகளையும் கண்டு மகிழ்ந்தனர். அது மட்டுமல்லாது நமது மரபு சார்ந்த கலைகளான காவடியாட்டம், மயிலாட்டாம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், தவிலடித்தல், நாதஸ்வரம் வாசித்தல், நாட்டுப்புறப்பாட்டுப் பாடுதல் ஆகியவற்றையும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்ததுடன் அந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஆடியும் பாடியும் மகிழ்ந்தனர்.

