அனுஷா செல்வமணி
இன்று உலகப் புற்றுநோய் தினம். புற்றுநோயால் அவதியுற்றவர்கள் அதிலிருந்து மீண்டு வர, பெரும்பாடு பட வேண்டியுள்ளது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இந்த நோய் அவர்களைப் புரட்டிப்போட்டு விடுகிறது. இருப்பினும், அவர்கள் அந்தத் துயரத்தை உந்து சக்தியாக எடுத்துக்கொண்டு, மன பலத்தோடு எதிர்கொள்கின்றனர்.
2016லிருந்து, 2020 வரை, சிங்கப்பூரில் இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் மலக்குடல், ஆண்சுரப்பி, நுரையீரல் புற்றுநோய்களால் பாதிப்படைகிறார்கள் என்று சிங்கப்பூர் புற்றுநோய்ப் பதிவகம் சுட்டியது.
இவ்வாறு, பெண்கள் அதிகமாக மார்பகம், மலக்குடல், நுரையீரல் ஆகிய புற்றுநோய்களால் எளிதில் பாதிப்படைகிறார்கள் என்றும் பதிவகம் தெரிவித்துள்ளது.
புற்றுநோய்க்கு முழுமையான தீர்வு இன்னும் இல்லாத பட்சத்தில் மருத்துவர்கள், கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை போன்றவற்றைப் பரிந்துரைக்கின்றனர்.
தேசிய பல்கலைக்கழகப் புற்றுநோய் நிலையத்தின் கதிர்வீச்சுப் புற்றுநோய் மருத்துவப் பிரிவில் மூத்த ஆலோசகராக இருக்கும் டாக்டர் பாலமுருகன் அ வெள்ளையப்பன், சிங்கப்பூர் உயிர்க்கொல்லிகளில் புற்றுநோய் முதல் இடம்பிடித்துள்ளது என்றார்.
ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் இந்த நோய் வரலாம் என்பதால், மக்கள் விழிப்புணர்வோடு பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டும் என்றார். தன்னுடைய நண்பர்களையும் உறவினர்களையும் பாதித்த இந்த கொடிய நோய், நோயாளியையும் அவரின் குடும்பத்தினரையும் பெரிதாகப் பாதிக்கும் என்று கூறினார்.
புற்றுநோயை முற்றிலும் அழிப் பது கடினமாக இருந்தாலும், அதை தடுப்பதற்கு மருத்துவர்கள் பல வழிகளைக் கண்டறிகின்றனர். அவ்வாறு, டாக்டர் பாலமுருகன், புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பங்காற்றுகிறார்.
சிறு வயதிலிருந்து மிதிவண்டி ஓட்டும் பழக்கம் உள்ள இவர், வாரத்திற்கு 100 கி.மீ. தூரம் வரை மிதிவண்டி ஓட்டுகிறார். வீட்டில் உடற்பயிற்சி மிதிவண்டி ஓட்டுவதால், அன்றாடம் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து, உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட, சிங்கப்பூர் புற்றுநோய் அறிவியல் கழகம், சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையம், தேசிய பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி ஆகியவை ‘கேன்சைக்கிள்’ (CanCycle) எனும் திட்டத்துக்கு கைகோர்த்துள்ளன.
இதன் மூலம், மக்கள் மிதிவண்டி ஓட்டி நிதி திரட்டலாம். மெய்நிகர் வழியாகவும் நிதி திரட்ட வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக டாக்டர் பாலமுருகனும் அவருடைய குழுவைச் சேர்ந்த நண்பர்களும் இதுவரை 1,500 கிலோமீட்டருக்கு மேல் மிதிவண்டி ஓட்டியுள்ளனர். அதோடு, $7,000க்கும் அதிகமாக நிதியும் திரட்டியுள்ளனர்.
தாவர அடிப்படையிலான உணவு வகைகளை உட்கொண்டு வரும் இவர், பொதுமக்களையும் தன்னைப் போன்ற ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க ஊக்கப்படுத்து கிறார்.
பொதுமக்களும் டாக்டர் பாலமுருகனைப் போல இந்த நிதி திரட்டில் கலந்துகொள்ளலாம். இந்த நிகழ்வு இம்மாதம் 11ஆம் தேதி வரை நடப்பிலிருக்கும்.
அவ்வாறு, இந்த கொடிய நோயிலிருந்து பல இன்னல்களை எதிர்நோக்கிய மூவரின் கதைகளையும், அனுபவங்களையும் அறிந்து வந்தது தமிழ் முரசு.
இப்படி இருந்திருக்க வேண்டும்
இச்செய்தியில் சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையம் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. அது தேசிய பல்கலைக்கழகப் புற்றுநோய் நிலையம் என்று இருந்திருக்க வேண்டும். தவற்றுக்கு வருந்துகிறோம்.