ரச்சனா வேலாயுதம்
அன்பர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ல் கடைப்பிடிக்கப்படுவது நாம் அறிந்தது. அதற்கு அடுத்த நாளான இம்மாதம் 15ஆம் தேதிக்கு ஒரு சிறப்பு உண்டு.
'சிங்கிள்ஸ் அப்ரிசியேஷன் டே' எனப்படும் இந்நாள், நம்மைச் சுற்றியிருப்போர்மேல் அன்பும் பாசமும் காட்ட நினைவுபடுத்துகிறது.
நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர் என்றில்லாமல் ஒருவர் தன்மேலும் முறையான அன்பைச் செலுத்தவேண்டும் என்று இது வலியுறுத்துகிறது.
தொற்றுநோய்ப் பரவலுக்குப்பின் வழக்கநிலை பெரும்பாலும் மீண்டுள்ள இவ்வேளையில், இதைக் கொண்டாடப் பலவகையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஒரு மாற்றத்திற்காக இதுவரை சுவைத்திராத சமையல் வகையை உண்டு பாருங்கள்.
சிங்கப்பூரில் ஆசிய, மேற்கத்திய உணவுகளுடன் துருக்கி, அரேபியா, லெபனான், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் உணவுவகைகள்கூட கிடைக்கின்றன. இவற்றைத் தேடிச் சுவைக்கலாம்.
கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளால் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகம் பார்க்க இயலாத நண்பர்களோடு சேர்ந்து விருந்துண்ணலாம்.
கைமணம் உள்ளவர்கள் வீட்டிலேயே சமைத்து விருந்து படைக்கலாம். எப்போதும் உண்ணும் உணவுவகைகளுக்குப் பதில் வேறுபட்ட சுவையில், மணத்தில் சமைப்பது மனத்துக்கும் இதமளிக்கும்.
புதிதாக ஏதாவது கைவினைப் பொருள் செய்யவோ கலையைக் கற்கவோ இந்த நாளில் தொடங்கலாம். எடுத்துக்காட்டாக, தற்போது மண்பாண்டம் செய்யும் வகுப்புகளில் சிலர் சேர்கிறார்கள்.
நண்பர்கள் ஒரு குழுவாகவோ தனியாகவோ இத்தகைய வகுப்புகளில் சேர்ந்து பயிலலாம். ஓவிய வகுப்புகளில் சேரலாம். உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற இது உதவும்.
மனஉளைச்சலைப் போக்க உடற்பிடிப்புக்குச் செல்லலாம். கூடுதலாக, உங்கள் முகத்திற்குப் பொலிவூட்டும் முகப் பராமரிப்புச் சேவையையும் நாடலாம்.
அழகு நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே நறுமணம் தரும் மெழுகுவர்த்திகளை ஏற்றி, முகத்திற்குப் பொலிவூட்டும் கலவையைப் பூசியபடி, பிடித்த திரைப்படத்தைப் பார்க்கலாம்.
பழைய திரைப்படங்கள், வேற்றுமொழிப் படங்கள் என வித்தியாசமாகத் தேர்வு செய்து பார்க்கலாம்.
திரையரங்கு செல்வோர் ஒரு மாற்றத்திற்கு அனைத்துலகப் படங்களைப் பார்க்கலாம்.
வெளியே செல்லப் பிடிக்காதவர்கள், குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வீட்டிலேயே நேரம் செலவிடலாம்.
சிரித்து, பழங்கதைகள் பேசும்வேளையில், மனக்கவலைகள் பஞ்சாய்ப் பறந்துவிடும். அல்லது தனிமையிலும் அவரவர் வாழ்வின் சிறந்த பக்கங்களைப் புரட்டிப் பார்த்து பெருமிதம் கொள்ளலாம்.
வாழ்க்கைத்துணைமீது செலுத்தும் அன்பு மட்டுமே கொண்டாட்டத்துக்கு உரியது என்றில்லை. அதேபோல், அன்னை, தந்தை, உடன்பிறந்தோர், நண்பர்கள் ஆகியோருக்கு இடையிலான அன்புதான்
சிறந்தது என்றில்லை.
இந்த வரையறைகளுக்கு அப்பாலும் செலுத்தக்கூடியது அன்பு.
நேசம் என்பது மானுடம் என்ற எல்லையையும் கடந்து அனைத்து உயிரினங்களோடும் தொடர்பு கொள்ள உதவும் மொழி.
பேதமின்றி யாவரையும் நனைக்கும் மழையைப்போல் அது அனைவர்க்கும் பொது.

