பொன்மணி உதயகுமார்
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குமுன் சந்தித்த ஃபிராங்க்-மலர் சிங்கம் தம்பதியருக்கு ஆண்டுதோறும் அன்பர் தினம் கோலாகல நிகழ்வாகவே அமைந்து வருகிறது. தாங்கள் மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இவ்வாண்டு அன்பர் தினத்தை இவர்கள் கொண்டாடுகின்றனர்.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் பணிபுரிந்து ஒய்வுபெற்ற திரு ஃபிராங்க் சிங்கம் கடந்த 10 ஆண்டுகளாக மணமக்களுக்கு ஆலோசனை வழங்கிவரும் சேவையை ஆற்றி வருகிறார்.
கணவன், மனைவியாக தங்களது அன்பை தனித்துவ முறையில் பரிமாறி வந்தாலும் திருமண பந்தத்தின் தொடக்கத்தை அவர்கள் இதுவரை மறக்கவில்லை.
ஒருவருக்கு ஒருவர் தங்கள் அழகில் மயங்கிய நாளை அன்புடன் இருவரும் இன்றும் நினைவுகூர்ந்தனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முதல்முறையாக சந்தித்த இவர்களின் மணவாழ்வு ஏற்ற இறக்கமாக இருந்து வந்துள்ளது.
"மணவாழ்க்கை தொடக்கத்திலிருந்தே சீராக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஓரிரு ஆண்டுகள் கடந்த பின்னரே வாழ்க்கைத் துணையைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியம், அப்போதுதான் சவால்கள் தொடங்கும்," என்று கூறினார் திரு ஃபிராங்க், 71.
இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும் இரண்டு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
முன் பின் அறிமுகம் இல்லாமல் 38 ஆண்டுகளுக்கு முன்பு திருமண மேடையில் முதல்முறையாக சந்தித்தனர் ஹாஜாநஜ்முதின்-ஜரீனா பானு தம்பதியர். அன்பைப் பரிமாறிக்கொள்வதில் பிள்ளைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுடன் திகழும் இவர்கள், அன்பர் தினம் மட்டும் இல்லாமல் மற்ற தினங்களிலும் அன்பளிப்புகளைப் பரிமாற்றிக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
ஒருவர் மற்றொருவரின் குணத்தைப் புரிந்துகொண்டு அறிவுரை பரிமாறி இத்தனை ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்துள்ள இவர்கள் உலகம் போற்றும் அன்பர் தினத்தையும் தாண்டி, எல்லா நாள்களிலும் அன்பை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதில்லை.
"இன்றுவரை நாங்கள் பிரிந்து இருந்ததில்லை. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தபோதுகூட நாங்கள் ஒன்றாகவே சென்று வந்துள்ளோம்," என்றார் திருமதி ஜரீனா, 55.
"மற்றவரைவிட நான்தான் பெரியவர் என்று நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை. இதுவே எங்கள் திருமண வாழ்வின் தாரக மந்திரம்," என்று கூறினார் திரு ஹாஜாநஜ்முதின், 61.
ஒருவர் மீது மற்றொருவர் அக்கறை செலுத்துவதே அன்பின் வெளிப்பாடு என்று நம்புகின்றனர் கோமதி-அன்பழகன் தம்பதி. கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு முன்னர், தம்முடைய 14வது வயதில் திரு அன்பழகனை முதல்முறையாக சந்தித்த திருமதி கோமதி, அந்த காலத்தில் இன்றுபோல் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்.
ஒருவரோடு ஒருவர் பேசவில்லை என்றாலும் இருவருக்கிடையே இருந்த ஈர்ப்பு ஆண்டுகள் கடந்தும் குறையவில்லை.
முன்பு ராணுவத்தில் பணிபுரிந்த இருவரும், திருமதி கோமதி 23 வயதானபோது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
கடந்த ஆண்டுதான் இந்தத் தம்பதி தங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். திருமணப் பந்தம் வலுவாக இருந்து வருவதற்கு மூன்று முக்கிய காரணங்களை திருமதி கோமதி முன்வைத்தார்.
முதலாவது, விட்டுக்கொடுத்து நடப்பது. இரண்டாவது, புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வது. மூன்றாவது, நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்துவது. எளிதில் பட்டியலிடக்கூடிய இந்தக் குணங்கள் ஆழமான அர்த்தம் உடையவை என்றும் அவர் கூறினார்.
இவ்விருவரும் ஒருவர் மற்றொருவரின் தேவையை நன்கு அறிந்துகொண்டு ஒன்றாக நேரம் செலவிட்டு தங்களுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்திக்கொண்டுள்ளனர். தங்கள் துணைவியாரின் தேவைகளை அலட்சியப்படுத்தாமல் அவரை எப்போதும் கவனத்தில் வைத்திருப்பது அவசியம் என்று சொன்னார் திருமதி கோமதி.
காலம் பல கடந்தாலும் இவர்களின் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் நேரங்களில் மாற்றமே பெறாதது ஒன்றாகச் சேர்ந்து இரவு உணவு அருந்துவது. அன்பின் வெளிப்பாடு, அன்புக்குரியவரின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வதில் இருக்கிறது என்று நம்புகிறார் திருமதி கோமதி, 60.
அன்பர் தினத்தை கொண்டாடும் நேரத்தில், இந்த மூன்று தம்பதிகளும் அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்வதையும் தாண்டி, இவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வே காதல் மலர்வதற்கு உந்துதலாக அமைகிறது.
அன்பர் தினம் இளையர்களுக்கு மட்டுமல்ல, ஒருவர் மற்றொருவர் மீது அன்பை வெளிப்படுத்துவதில் இந்தத் தம்பதிகள் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.

