அன்பர் தினத்தை முன்னிட்டு சமூகத்தில் அன்பை பரப்பவும் குழந்தைகள் மத்தியில் சமூக உணர்வை வளர்க்கவும் 19வது முறையாக 'புரோஜெக்ட் ரிஃப்ரெஷ்' செங்காங் வட்டாரத்தில் கடந்த சனிக்கிழமை நடந்தது.
இந்நிகழ்வில் 26 வாடகை வீடுகளை சுத்தம் செய்து, அடைந்து கிடைக்கும் பொருள்களை அகற்றி, சுவருக்கு வெள்ளை சாயம் பூசியும் 200 தொண்டூழியர்கள் சேவை புரிந்தனர்.
வர்த்தகப் பங்காளித்துவ அமைப்புகள், தொழில்நுட்ப கல்விக் கழக (காலேஜ் ஈஸ்ட்) மாணவர்கள் ஆகியோருடன் வெகுகாலமாக வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்துடன் தொண்டூழியம் புரிவோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
யங்-என்டியுசி, வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் இணைந்து தொடங்கிய 'புரோஜெக்ட் ரிஃப்ரெஷ்' விழாக்காலங்களில் நடைபெறும் ஒன்றாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு காலாண்டிலும் இந்த தொண்டூழிய நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
தொண்டூழியத்தின் ஓர் அங்கமாக 'பிரைட் கிட்ஸ் ஸ்கூல் ஹவுஸ்' பாலர் பள்ளியின் 15 மாணவ மாணவிகள் பங்கேற்று 150 வீடுகளுக்கு அன்பளிப்புகளும் மலர்களும் வழங்கினர். 'போஸ்டட்' நிறுவனம் அன்பளிப்புகளை நன்கொடையாக வழங்கியது.
புற்றுநோயாலும் நீரிழிவாலும் பாதிக்கப்பட்டுள்ள திருவாட்டி வசந்தி வீராசாமி, 62, 'புரோஜெக்ட் ரிஃப்ரெஷ்' திட்டத்தின்மூலம் இருமுறை பயனடைந்துள்ளார்.
அவருக்கு வருமானம் இல்லை. எனவே, தற்காலிக பணிகளை செய்துவரும் 20 வயது மகனை சார்ந்து அவர் இருக்கிறார். உடல்நிலை குன்றிய நிலையில் வீட்டு வேலைகளைப் பார்க்க மிகவும் சிரமப்படுவதாக அவர் கூறினார்.
இந்நிலையில் தொண்டூழியர்களின் சேவை திருவாட்டி வசந்திக்கு பேருதவியாக இருந்தது. தன்னுடன் பணிவன்புடன் பழகி வீட்டை சுத்தம் செய்து கொடுத்த தொண்டூழியர்களுக்கு தாம் நன்றிக்கடன் பட்டிருப்பதாக திருவாட்டி வசந்தி சொன்னார். சிறுவர்கள் எதிர்பாராத விதமாக அன்பளிப்பு கொடுத்ததும் அவருக்கு மகிழ்ச்சி அளித்தது.
இத்திட்டத்தில் முதல்முறையாக தொண்டூழியம் புரிந்த 'ஐவாவ்' நிறுவனத்தைச் சேர்ந்த திரு அஷோகன் ராமகிருஷ்ணன், 49, சக ஊழியருடன் நிகழ்வில் கலந்துகொண்டார்.
தனியாக வாழும் மூத்தோருக்கு உதவக்கூடிய அவசர உதவி பொத்தான்களை வடிவமைக்கும் தனது நிறுவனம், சமூகத்திற்கு உதவும் நோக்கில் தொண்டூழியத்தில் ஈடுபட தொடங்கியுள்ளது என்றும் இது தான் சமூகத்திற்கு சேவை புரிய நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றும் அவர் கூறினார்.
அன்பர் தினத்தையொட்டி நடந்த இந்த நிகழ்வு தனியாக வசிக்கும் மூத்தோர், அல்லது வாழ்க்கைத் துணையை இழந்தவர்களைக் கொண்டாட்டங்களில் இணைக்க வழிவகுக்கிறது என்று வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டெஸ்மண்ட் சூ தெரிவித்தார்.
அதோடு, சிறு வயதில் இருந்தே மாணவர்களைத் தொண்டூழியத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் சமூக உணர்வையும் சமூகப் பிணைப்பையும் வலுப்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
செய்தி: பொன்மணி உதயகுமார்

