கருணாநிதி துர்கா
சிங்கப்பூரில் பெருகிவரும் கடல் குப்பைகளின் அளவை கட்டுக்குள் கொண்டுவர பலரும் தங்களால் ஆன பங்கை ஆற்றி வருகின்றனர்.
நாலா புறமும் கடலால் சூழப்பட்டுள்ள சிங்கப்பூர் போன்ற தீவு நாடுகளுக்கு இப்பிரச்சினை முறியடிக்கப்பட வேண்டும்.
கடலில் குப்பை சேரும் பிரச்சினையை எதிர்கொள்ள சென்ற ஆண்டு தேசிய கடல் குப்பை அகற்றும் உத்திபூர்வ செயல்திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது.
2021ல் 10 கடற்கரைகளிலும் கடலோரப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் போத்தல்கள், நெட்டிகள், மரக்கிளைகள் உள்ளிட்ட 4,009 டன் கழிவுகளை தேசிய சுற்றுப்புற வாரியம் அப்புறப்படுத்தியது.
இந்தக் கழிவுகளின் அளவு 2020ல் 3,490 டன்னாகவும் 2019ல் 3,640 டன்னாகவும் இருந்தது.
உயர்நிலைப்பள்ளி முதல் தொடக்கக்கல்லூரி வரை பள்ளிகளுடன் இணைந்து கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் சிட்டிபாபு அஸ்வின், 18.
"நெகிழி குப்பைகளை கடலிலிருந்து அகற்றுவதால் கடல்வாழ் உயிரினங்கள் அவற்றை உட்கொள்ளும் வாய்ப்புகளை குறைத்து அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடிகிறது," என்று அவர் கூறினார்.
தன்னார்வத்துடன் கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் டி.ஸ்ரீராம், 24, ஆண்டுதோறும் இருமுறையாவது இம்முயற்சியை மேற்கொள்கிறார்.
"தொண்டூழியர்களாகச் சேர்ந்து அகற்றுவது கடலில் சேரும் குப்பைகளின் ஒரு சிறிய பங்குதான்.
"பொதுமக்களிடையே கடல் குப்பைகளை குறைப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் குப்பை அளவு குறையும்," என்று ஸ்ரீராம் கூறினார்.
சுமார் நான்கு ஆண்டுகளாக 'கோஸ்ட்டல் நேட்டிவ்ஸ்' எனும் அமைப்பில் இருக்கிறார் ஷின்ட்டொ கெ அன்ட்டொ, 34.
அன்றாடம் பராமரிக்க முடியாத கடலோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் தொண்டூழியப் பணியில் 'கோஸ்ட்டல் நேட்டிவ்ஸ்' ஈடுபட்டு வருகிறது.
அண்மையில் இந்த அமைப்பு பாசிர் ரிஸ் கடற்கரையை 10 பேர் இணைந்து இரண்டு மணி நேரம் சுத்தம் செய்ததில் கிடைத்த குப்பையின் எடை கிட்டத்தட்ட 200 கிலோகிராம் என்றார் ஷின்ட்டொ.
"ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசப்படும் பொருள்களின் புழக்கத்தைக் குறைக்க நாம் அனைவரும் நமது பங்கை ஆற்ற வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னரே பல உணவகங்கள் நெகிழி உறிஞ்சு குழாய்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டன.
இதுபோன்ற முயற்சிகளை நாம் தொடர்ந்து எடுத்து வந்தால் நிச்சயம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்," என்று ஷின்ட்டொ கூறினார்.
லிட்டில் 'கிரீன் மேன்' எனும் லாப நோக்கமில்லா அமைப்பைச் சேர்ந்த பிரஜக்தா பாலாஜி, 44, தன் குடும்பத்துடன் இணைந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
"நாம் அகற்றும் ஒவ்வொரு கடல் குப்பையும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அதுமட்டுமல்லாமல், சில பழக்கங்களை நாம் மாற்றிக்கொள்வதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும். உதாரணத்திற்கு, கடைக்குச் செல்லும்போது துணிப்பைகளைக் கொண்டுசெல்வதால் நெகிழிப் பைகளின் பயன்பாடு குறைகிறது," என்று பிரஜக்தா கூறினார்.
கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் மட்டுமல்லாது, பூமிக்கும் தீங்கு விளைவிக்கும் கடல் குப்பை பிரச்சினையை முறியடிக்க தனிமனிதர்களும் பங்காற்ற வேண்டும்.

