பொன்மணி உதயகுமார்
தொன்மைமிகு இந்தியக் கலைகளை சிங்கப்பூரில் அடுத்த தலைமுறையினர் முன் எடுத்துச் செல்வர் என்பதற்கு கட்டியம் கூறுகிறது 'சுடர்' நடன நிகழ்ச்சி.
மார்ச் மாதம் 5ஆம் தேதி ஏழு மணிக்கு 'கேட்வே' அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்காக கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் இந்த இளம் கலைஞர்கள்.
இந்த நடனத்தை வடிவமைத்த 36 வயது குமாரி உஷா அன்பழகன் ஐந்து வயதில் நடனம் பழகத் தொடங்கியவர்.
கடந்த 31 ஆண்டுகளாக நடனம் ஆடிவரும் உஷா, இதுவரை சிறிய நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு நடனம் அமைத்துள்ளார். பெரியளவிலான நிகழ்ச்சிக்கு நடனம் அமைப்பது இதுவே முதல் முறை.
தனக்குள் 'சுடர்' விடும் நடனத்தின் உணர்வொளியைக் கருவாகக்கொண்டு இந்த நடனத்தை வடிவமைத்துள்ளார் அவர்.
பாஸ்கர் கலைக் கழகத்தின் பெரிய அளவிலான இந்தப் படைப்புக்கு தமது மாணவி குமாரி உஷா நடனம் அமைத்திருப்பதில் அவரது குரு திருமதி அம்புஜாவுக்குப் பெருமகிழ்ச்சி.
இளம் கலைஞர்கள் நிகழ்ச்சியை மேடையேற்றுவது, பாஸ்கர் ஆர்ட்ஸ் நிறுவனவர்களான மறைந்த கலைஞர்கள் பாஸ்கர் தம்பதியின் கனவை நிறைவேற்றும் வண்ணம் அமைகிறது என்றார் அவர்.
இளம் நடனக் கலைஞர்களுடன் இணைந்து பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தின் ஸ்வாதி இசைக்குழுவின் இளம் இசைக் கலைஞர்கள் இசை வழங்குகின்றனர்.
நிகழ்ச்சியின் இசை அமைப்புக்கு தலைமை தாங்கும் திருமதி அரசகுமாரி குறுகிய காலத்தில் இளையர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் பெருமை கொள்வதாக கூறினார்.
வீணை, மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் கலைஞர்களுடன் எட்டு வாய்ப்பாட்டு கலைஞர்களும் இணைந்து நேரடி இசை வழங்கவுள்ளனர்.
இளம் தலைமுறையினரின் கடின உழைப்பையும் திறனையும் வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் வளரும் கலைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.
நிகழ்ச்சிக்கு பல முன்னோடி இசை, நடன ஆசிரியர்கள் வழிகாட்டி வருகின்றனர்.
இளம் கலைஞர்களை முன்னிலைப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் கலைஞர்களின் வளர்ச்சிக்கும் கலையின் தொடர்ச்சிக்கும் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்றார் சிங்கப்பூரின் தன்னிகரற்ற புல்லாங்குழல் இசை கலைஞர் கானவிநோதன் ரத்னம்.
நிகழ்ச்சிக்கான $25.00 நுழைவுசீட்டை https://www.bhaskarsartsacademy.com/events.upcoming என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
uponmani@sph.com.sg

