புகழ்பெற்ற தமிழ் நடிகை பானுப்ரியா தமக்கு நினைவாற்றல் மங்குவதாக அண்மையில் கூறியிருந்தார். அவருக்கு மறதிநோய் உள்ளதென்று மருத்துவ ரீதியாகக் கூறப்பட்டதாக செய்திகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பொதுவாக சாதாரண மறதிக்கும் மறதி நோய்க்குமான வேறுபாடுகளைக் கண்டுகொள்வது சிரமமாகவே உள்ளது. மறதி நோயின் அறிகுறிகளைத் தொடக்கத்திலேயே கண்டு கொண்டால் நோய் மோசமடைவதைத் தள்ளிப்போட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறுகியநேர மறதி: மறதி என்பது மறதிநோயின் ஆரம்பநிலை அறிகுறிகளில் ஒன்று. பல்லாண்டுகளுக்கு முன் நடந்ததை மறக்காதவர்கள், அன்று காலையில் என்ன உண்டோம், பொருள்களை எங்கு வைத்தோம், போன்ற அம்சங்களை மறந்துவிடக்கூடும்.
சலிப்பு: ஆர்வம் இல்லாததும் சலிப்பும் மறதிநோயின் அறிகுறியாக இருக்கலாம். மறதிநோய் உள்ளவர்களுக்குப் பழைய பொழுதுபோக்குகளில் அல்லது வெளியே சென்று மகிழ்வதில் அல்லது குடும்பத்தாருடன் நேரம் கழிப்பதில் ஆர்வம் குன்றக்கூடும்.
திசைமாறிச் செல்வது: மறதிநோய் ஏற்படும்போது எங்கிருக்கிறோம், எத்திசையில் செல்லவேண்டும் என்பன மறந்துபோகலாம். முன்பு பழக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடும்.
குழப்பம்: நபர்கள், தேதி, நாள், இடம் போன்றவற்றைச் சரியாக அடையாளம் கண்டு சொல்லமுடியாது குழப்பமடைவதும் ஓர் அறிகுறியாகும்.
கோபம்/மனஅழுத்தம்: மறதிநோய் உள்ளவர்கள் அடிக்கடி கோபம் அல்லது மன அழுத்தம் கொள்ளலாம். அல்லது அவர்கள் அன்றாடம் பழக்கப்பட்டவை மாறினால் பதற்றமாகலாம்.
சொற்கள்: மறதிநோய் உள்ளோர் சில நேரங்களில் சில அடிப்படை சொற்களை மறக்கலாம் அல்லது மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்குச் சிரமம் ஏற்படலாம்.

