பொன்மணி உதயகுமார்
தங்களின் மாதவிடாய்க் காலத்தில் ஸ்பெயின் நாட்டு மாதர், மூன்றிலிருந்து ஐந்து நாள்கள் வரை ஒவ்வொரு மாதமும் சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். மாதர் நலனை பேணும் வகையில் ஜப்பான், தென்கொரியா, தைவான், இந்தோனீசியா, ஸாம்பியா போன்ற நாடுகளை அடுத்து ஸ்பெயின் அரசு இது தொடர்பான சட்டத்தை நிறைவேற்றியது.
கடும் வலியால் மாதவிடாய்க் காலத்தில் அவதியுறும் மாதர் சிலர், அதைப் பொறுத்துக்கொண்டு வேலைக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது.
‘இந்த வம்பே வேண்டாம்’
மாதவிடாய் குறித்துப் போதிய அறிதல் இல்லாத ஆண் மேலாளர்கள், மாதவிடாய்க் காலத்தில் வலி ஏற்படாத பெண் முதலாளிகள் ஆகிய இருதரப்பினருக்கும் புரிந்துணர்வு குறைவாக இருக்கிறது எனலாம். இதனால், மாதவிடாய்க் காலத்தில் கடும் வலியால் அவதியுறும் மாதர் ‘இந்த வம்பே வேண்டாம்’ என விடுப்பு கோராமல் வலியுடன் வேலை பார்க்கிறார்கள்.
இந்நிலையில் மாதவிடாய்க் கால விடுப்புத் திட்டம் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மாதர் சிலரிடம் கருத்து கேட்டது தமிழ் முரசு.
நீக்குப்போக்கு தேவை
மனிதவளத் துறையில் பணிபுரியும் 22 வயது ராகா, தாம் 13 வயதிலிருந்தே மாதவிடாய்க் காலத்தில் வலியை அனுபவித்துள்ளதாகப் பகிர்ந்துகொண்டார். வேலையிலிருந்து விடுப்பு பெற, மருத்துவச் சான்றிதழைப் பெறும் நிலை அவருக்குப் பலமுறை ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மாதவிடாய்க்கென நிறுவனங்கள் விடுப்பு நாள்களை ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கருதும் இவர், சிங்கப்பூர் முதலாளிகள் எந்த அளவிற்கு இதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே எனக் கூறினார். விடுப்பு கிடைக்காத பட்சத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நீக்குப்போக்கு இருப்பது நன்று என்றும் இவர் தெரிவித்தார்.
ஓய்வு முக்கியம்
கணக்காய்வாளர் ஷிரின், 21, வேலையில் சேர்ந்து ஓராண்டு காலம் ஆகிவிட்டது என்றார். இருப்பினும் மாதவிடாய்க் காலத்தில் வேலையிலிருந்து விடுப்பு கோருவதற்குத் தாம் பெரிதும் தயங்குவதாக அவர் கூறினார். ஆனால் தமது நிறுவனம் அவ்வப்போது வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிப்பது உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.
மாரடைப்புக்கு நிகரான அதே அளவு வலி மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியும் பலர் மாதவிடாய் வலியை அலட்சியப்படுத்துகின்றனர். போதிய ஓய்வு கிடைத்தால் மட்டுமே வேலையைச் சரியாகச் செய்து முடிக்க முடியும் என்பது ஷிரினின் கருத்தாகும்.
வேலையே கதி என்ற இக்காலத்தில் சட்டத்திலும் நிறுவனங்களிலும் மாதவிடாய்க்கென விடுப்பு நாள்கள் ஒதுக்கப்படுவது சந்தேகமே என்றார் ஷிரின். அதிலும் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் துறைகளில் மாதவிடாய்க்கென விடுப்பு அளிப்பது அவசியமான ஒன்று என்றுரைத்தார்.
மௌனமாக அவதிப்படும் நிலை
முன்னதாக தகவல்தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்த திருமதி ராதிகா ராமலிங்கம், மாதவிடாய்க் காலங்களில் அவ்வப்போது விடுப்பு கேட்டிருந்ததாகக் கூறினார். அத்தருணங்களில் மேலாளர்கள் முகம் சுளித்ததுண்டு என்றும் அவர் கூறினார்.
கடும் இடுப்பு வலியால் ஒவ்வொரு மாதமும் தவிக்கும் இவர், மாதவிடாய்க் காலத்தின் முதல் நாளிலாவது ஓய்வு பெற நினைப்பார். ஆனால் மேலாளர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாதவிடாய் குறித்த புரிதல் இல்லாததால் பலமுறை தாம் மௌனமாக அவதிப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தற்போது இவர் தமது மாதவிடாய்க் காலத்தில் வீட்டு வேலைகள் செய்வதைக் குறைத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டார். நான்கு வயது குழந்தைக்குத் தாயான இவர், திருமணம் ஆன ஆரம்ப காலத்தில் தம் கணவருக்குக்கூட இதுகுறித்த புரிதல் இல்லை என்று சொன்னார்.
சிங்கப்பூரில் நடப்புக்கு வருமா...
அறிதல் புரிதலை அதிகரிக்கும். புரிதல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதே தமிழ் முரசிடம் பேசிய மாதரிடையே பொதுவாக நிலவிய கருத்தாகும். வருங்காலத்தில் சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளைப் போல் மாதவிடாய்க் கால விடுப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது இவர்களின் விருப்பமாகும்.
அப்போதுதான் வலி ஏற்படும் நாள்களில் தயங்காமல், பயப்படாமல் ஓய்வுபெறும் வாய்ப்பையும் தைரியத்தையும் இந்த விடுப்புத் திட்டம் நம் மாதருக்கு அளிக்கும்.