ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகம் உயர்த்தாத காலை உணவை விரும்பும் நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் உணவுவகைகளில் ஒன்று ஓட்ஸ்.
ஒரு கோப்பை ஓட்சில் ஏறத்தாழ 30 கிராம் மாவுச்சத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் அதிக நார்ச்சத்தும் உள்ளது. அது அதிக நேரம் வயிறு நிரம்பியிருக்க உதவுகிறது.
அதனால் ஓட்ஸ் ரத்தத்தில் மிக மெதுவாக சர்க்கரையாக மாறுகிறது. மேலும் கொழுப்பைக் குறைக்க உதவுவதால் இதயத்துக்கும் ஓட்ஸ் நன்மை தரக்கூடியது.
ஆனால் ஓட்ஸ் உண்ணும்போதும் சில குறிப்புகளை மனதில் கொள்வது முக்கியம். ஏனென்றால் அளவுக்கு மீறினால் ஓட்ஸ் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுதான்.
உடனடியாக வேகும் ஓட்சில் சர்க்கரை அல்லது உப்பு போன்றவை சேர்க்கப்பட்டிருக்கலாம். அதனால் சாதாரண ஓட்ஸ் வாங்குவதே சிறப்பு.
முதலில் ஓட்சை காலையில் உண்பதுதான் நல்லது. உடலுக்கு அதிகம் எரிசக்தி தேவைப்படாத, உடல் மந்தமாக இருக்கும் மாலை, இரவு நேரங்களில் ஓட்சைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு வேளைக்கு சிறிதளவு ஓட்ஸ், சுமார் இரண்டு மேசைக்கரண்டிகள் போதுமானது.
ஓட்சுடன் நல்ல கொழுப்புள்ள, சியா விதை, ஆளி விதை, பாதாம், வால்னட், சூரியகாந்தி விதை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். பட்டைத் தூளைச் சேர்த்தால் ஓட்சில் சுவை சேரும். அல்லது, எள்ளு, பாதாம் போன்றவற்றால் ஆன வெண்ணை அல்லது பாலை ஓட்சில் சேர்த்துக் கொள்ளலாம்.
அத்துடன், பட்டைத் தூள் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை போன்றவற்றை ஓட்சில் சேர்ப்பதைத் தவிர்த்துவிட்டு, தேன், உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் போன்றவற்றை மிகவும் குறைந்த அளவில் சேர்க்கலாம்.

