முஹமட் இர்ஃபான் அஸ்மான் பகலில் பலதுறைத் தொழிற்கல்லூரியின் கணினிப் பொறியியல் மாணவர். ஆனால், வார யிறுதிகளில் முடிதிருத்து பவராக மாறி விடுவார்.
வருகின்ற மே மாதத்தில் 18 வயதாகும் இர்ஃபானுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவமே புதிய தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வைத்தது.
2020 ஜூன் மாதத்தில் முடி திருத்தகத்துக்குச் சென்ற இர்ஃபான், இரண்டு மணி நேரம் காத்திருந்தும் முடி வெட்ட முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
கொள்ளைநோய் பரவிய அந்தக் காலக்கட்டத்தில் முடி திருத்தும் ஊழியர் களில் பலர் தொற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தனர்.
"அப்போதுதான் முடிவெட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டது," என்றார் இர்ஃபான்.
இணையம் வழியாகத் தலை முடியை அலங்கரிக்கும் உபகரணங் களையும் சாதனங்களையும் வாங்கிய அவர், யூடியூப் காணொளிகளைப் பார்த்துத் தலைமுடியை அலங்கரிக்கக் கற்றுக்கொண்டார்.
2021ஆம் ஆண்டு இறுதியில் முதல் முறையாக ஒரு வாடிக்கை யாளர் அவரிடம் பணம் கொடுத்து தலை முடியை வெட்டிக்கொண்டார்.
கடந்த ஆண்டு தனது தொழில் பற்றிய டிக்டாக் கணக்கு ஒன்றைத் தொடங்கினார்.
இதனால் துவாசிலிருந்துகூட வாடிக்கையாளர்கள் அவரது வீடு உள்ள பாசிர்ரிஸ் வரை வந்தனர். ஒருமுறை தலைமுடி வெட்ட அவரது கட்டணம் $20.
புதிய பாணிகளை பின்பற்றிய தால் அவருக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
படிப்புக்கு முன்னுரிமை வழங்கிய தால் வாரயிறுதியில் மட்டும் அவர் முடிதிருத்தும் வேலையை செய்து வந்தார்.
இருந்தாலும் ஹரிராயா போன்ற பண்டிகைகள் நெருங்கும் நாட்களில் முன்பதிவு எதிர்பாராத அளவுக்கு இருந்தது.
இதில் ஈட்டிய வருமானத்தை தலைமுடிக்குப் பயன்படுத்தும் ஒரு பொருளை உருவாக்க அவர் பயன் படுத்திக்கொண்டார். அது, இன்னமும் ஆரம்பக் கட்டத்தி லேயே உள்ளது.
"நீங்கள் ஒரு பக்கம் கைத் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும். பணத்துக்காக அல்ல. அது, உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கான அனுபவங்களைப் பெற உதவும்," என்று டிக்டாக் காணொளி ஒன்றில் இர்ஃபான் தெரிவித்துள்ளார்.
தனது அனுபவங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்து கொண்ட இர்ஃபான், பலவிதமான பின்னணியில் உள்ளவர்களைச் சந்திப்பதும் அவர்களின் கதை களைக் கேட்பதும் உண்மையில் அறிவுக் கண்களைத் திறக்கிறது. புதிய தொடர்புகளை ஏற்படுத்துகிறது," என்றார்.
2021ஆம் ஆண்டு, பலர் வேலையிலிருந்து விலகும் ஆண்டாக அமைந்தது. 2022 வேலையிலிருந்து விலக முடியாத ஆண்டாக இருந்தது. 2023ஆம் ஆண்டு ஒரு புதிய தொழிலைக் கற்றுக்கொள்ளும் ஆண்டாக அமையவிருக்கிறது.
2023 டாவோஸ் நகர அறைகலன் தொழில்முனைவர் களுக்கான உலகப் பொருளியல் அரங்கத்தைப் பற்றிய கட்டுரை, பல தொழில்களை தெரிந்து கொள்வது ஒரு புதிய போக்காக மாறி வருகிறது என்று குறிப்பிடு கிறது.
அதாவது 36 விழுக்காடு அமெரிக்கர்கள் 2022ல் கைத் தொழில் ஒன்றை ஆரம்பித்தனர் அல்லது ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தனர்.
2022 அக்டோபரில் வெளியிடப்பட்ட மெக்கன்சியின் அமெரிக்கர்களுக்கான வாய்ப்புகள் பற்றிய ஆய்வறிக்கையும் அதிகமான ஊழியர்கள் பல தொழில்களில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தது.
ஆனால் சிங்கப்பூரில் எத்தனை பேர் வேறு ஒரு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டு வேலை செய்தவர்களில் 3.1 விழுக் காட்டினர் மட்டுமே பல வேலை களை செய்து வருகின்றனர் என்று சிங்கப்பூர் ஊழியர் அணியின் 2022ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. இது, 2021ல் சற்றுச் கூடுதலாக 3.5 விழுக்காடாக இருந்தது.
ஆனால் பல தொழில்கள், அதன் தீவிரம் மற்றும் நோக்கத் தில் மாறுபடுவதால் அவை வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கக்கூடிய வாய்ப்புள்ளது.
'ராபர்ட் வால்டர்ஸ் சிங்கப்பூர்' என்ற வேலைக்கு ஆள் அமர்த்தும் நிறுவனத்தின் அனாரான் திங், பல தொழில்களில் ஈடு படுவது வருங்காலத்தில் பிரபலமாகலாம் என எதிர்பார்க்கிறார்.
அதிகரித்துவரும் பணவீக்கம், பொருளியல் மந்தநிலைக்கான சாத்தியம். நிலையில்லாத வேலை போன்ற காரணிகளை அவர் காரணமாக சுட்டிக்காட்டுகிறார்.
ஒரே ஒரு பிரதான வேலையில் கிடைக்கும் வருமானம் மட்டுமே போதுமானதாக இருக்காது என்கிறார் அவர்.
பல தொழில்களில் ஈடுபடு வோருக்கு சமூக ஊடகங்கள் பக்க்பலமாக இருக்கின்றன. எந்த இடத்திலிருந்தும் வேலை செய்யக்கூடிய வசதிகள் தற் போது ஏற்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
வீட்டிலிருந்தே தொழில் செய்யக்கூடிய இணையம் வழி கற்பித்தல், தனியார் வாடகைக் கார் ஓட்டுநராக மாறுவது போன்ற தொழில்களில் எளிதாக ஈடுபடக்கூடிய சூழல் நிலவுகிறது.
மூத்த தொழில் பயிற்றுவிப்பாளரான அட்ரியன் சூ, சிங்கப் பூரின் இளம் ஊழியர்களிடையே மாற்றுத் தொழில்கள் பிரபலமாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் தங்கள் வேலைகளுக்கு வெளியே கூடுதல் வருமானம் மற்றும் அனுபவங்களுக்காக இதனைச் செய்து வரு கின்றனர் என்கிறார்.
கைத்தொழில்களில் ஈடுபடுவதற்கு வேறுபட்ட காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சில லாபகரமான தொழிலாக மாறி வருகின்றன.
திருவாட்டி நிக்கோலெட் இங், பட்டப்படிப்பு படித்துக் கொண்டே தனது 19வது வயதில் துணைப் பாடங்களை கற்பித்தார்.
படிப்பு முடிந்ததும் ஒரு பெரிய பொதுத் தொடர்பு நிறுவனத்தில் தனது கனவு வேலையில் அவர் சேர்ந்தார்.
ஆனால் ஒன்பது மாதங்களிலேயே அது தனக்கான வேலையில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார்.
2014ல் வேலையைக் கைவிட்டு துணைப்பாடங்களை அவர் கற்பிக்க ஆரம்பித்தார். மாணவர் எண்ணிக்கை கூடியது.
"ஆறு மாதங்களியே 60 மாணவர்கள் சேர்ந்துவிட்டனர்," என்று 32 வயதான திருவாட்டி இங் சொன்னார்.
தனது தொழிலை தொடர்ந்து நடத்தவும் பெருக்கவும் ஒரு நண்பரை தனது பங்காளியாக அவர் இணைத்துக்கொண்டார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஏழு இலக்க வருமானத் துடன் அவருக்கு ஏழு 'Write Edge' நிலையங்கள் இருந்தன.
தற்போது இந்நிறுவனம் சிங்கப்பூர் மலேசியாவில் இணையம் வழியாக துணைப்பாட வகுப்புகளை அந்நிறுவனம் நடத்தி வருகிறது. அதன் எட்டாவது கிளை அடுத்த மாதம் தொடங்கப்படவிருக்கிறது.
தனது கைத்தொழில் இன்று போல பெரிய அளவில் இருக்கும் என்று திருவாட்டி இங் கனவிலும் நினைக்காத நிலையில் திரு முஷாஃபா கமாலும், 35, முஹமட் ஃபவுசி இஸ்மாயிலும், 36 தங்களுடைய நவீன கைத் தொழிலில் மிகப்பெரிய இலக்கு டன் செயல்பட்டு வருகின்றனர்.
'லூஸிட்' எனும் மெய்நிகர் சாதனத்தை இவ்வாண்டு இறுதியில் வெளியிட அவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்தப் புதிய திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 130 மில்லியன் வெள்ளியை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு வரைபடத்தை வீட்டு உரிமை யாளர்கள் பதிவேற்றினால் 'லூஸிட்' மென்பொருள் அதனை முப்பரிமாணத்தில் காட்டுகிறது.
இது, வீட்டின் உள்ளமைப்புகளை மெய்நிகர் காட்சியில் வடிவமைக்க உதவும்.
இருவரும் தங்களுடைய புதிய திட்டத்திற்காக 'ஒயிட்போர்ட் அசோசியேட்ஸ்' என்ற உள் அலங்கார நிறுவனத்தையும் வாங்கியிருக்கின்றனர்.
எண்ணெய், எரிவாயு தொழிற் துறையில் இருந்த இருவரும் 2018ல் சந்தித்து தங்களுடைய எண்ணத்தை செயல் வடிவில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர்.
கடந்த ஆண்டு இவர்களுடைய நிறுவனம், நான்கு மில்லியன் வெள்ளியை ஈட்டியது.

