உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத வேலையில் உள்ளோர் காலையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்வது நல்லது. இருப்பினும் நடைப்பயிற்சிக்குப் பின் பசியை நாம் உணரும்போது வடை, எண்ணெய்ப் பதார்த்தங்கள், நொறுக்குத்தீனி ஆகியவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நடைப்பயிற்சியால் ஏற்படக்கூடிய பயனை இந்த உணவு வகைகள் தடுத்துவிடலாம். அதற்குப் பதிலாக முளைகட்டிய பாசிப்பயறு, வேகவைத்த கொண்டைக்கடலை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றைத் தெரிவு செய்து சாப்பிடலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன், உடற்பயிற்சியைச் செய்யும்போது, உடற்பயிற்சிக்குப் பின் ஆகிய மூன்று வேளைகளிலும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். இதனால் உடற்பயிற்சிக்குப் பிறகு அதிகப் பசி ஏற்படுவதை நாம் தவிர்க்கலாம். ஏழு நாள்களுக்குத் தொடர்ச்சியாக ஒன்றைச் செய்தால் அது பழக்கமாகிவிடும் என்று ஒரு சிலர் கூறியிருக்க நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆரோக்கியத்தைக் கட்டிக்காக்க நாமும் இந்தச் சிந்தனையுடன் செயல்படலாம்.

