ஆ விஷ்ணுவர்தினி
ஆசியா முழுவதிலுமிருந்து உணவு வகைகளை வழங்கும் சிங்கப்பூரின் முதல் உணவகமாக அமையவிருக்கிறது 'அப்போலோ ஃபுட் வில்லேஜ்'. லிட்டில் இந்தியா ஆர்க்கேட்டில் இருந்த பனானா லீஃப் அப்போலோ உணவகத்தில் கடந்த ஓராண்டாக புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, 500 உணவு வகைகளைப் பரிமாறுவதுடன் 350 பேர் அமர்ந்து உண்ணக்கூடிய புது உணவகமாக அது உருவெடுத்துள்ளது.
புதுப் பொலிவு பெற்றுள்ள இந்த உணவகம் அடுத்த திங்கட்கிழமை திறக்கப்படும். வரலாறு, மரபுடைமை, பல்வகை உணவு ஆகியவற்றை ஒரே கூரையின்கீழ் இணைப்பதற்கு முயற்சி செய்துள்ளது இந்த புது உணவகம்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங் களின் கலாசாரங்களை பறைசாற்றும் ஓவியங்களும் கலைப்பொருள்களும் இவ்விடத்துக்கு அழகு சேர்த்துள்ளன.
உணவகத்தின் ஒரு பகுதியில் சிங்கப்பூர் கூடம் அமைக்கப்பட்டு சிங்கப்பூரின் வரலாற்றுப் புகைப்படங்கள், அமரர் திரு லீ குவான் இயூவின் புகைப் படங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.
கடந்த 1974ல் தொடங்கப்பட்டு பெரும்பாலும் இந்திய உணவை வழங்கி வந்துள்ள பனானா லீஃப் அப்போலோ, இனி அப்போலோ ஃபுட் வில்லேஜில் இந்திய-சீன கலவை உணவு, கிழக்காசிய உணவு ஆகியவற்றையும் வழங்க இருக்கிறது.
உணவகத்தின் சிறப்பு உணவு வகையான மீன் தலை குழம்பு தொடர்ந்து வழங்கப்படும். எனினும் இக்கிளையின் தென்னிந்திய உணவுப் பட்டியல் பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார் உணவகத்தின் தலைமை நிர்வாகி செ. சங்கரநாதன்.
கொவிட்-19 காலத்தின்போது பனானா லீஃப் அப்போலோவின் லிட்டில் இந்தியா ஆர்க்கெட் கிளை ஊழியர் பற்றாக்குறை காரணமாக சில மாதங்களுக்கு முடங்கியிருந்தது.
"அச்சமயத்தில் புது முயற்சி எடுத்து எங்களைப் புதிதாக அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணினோம். கூடுதல் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் வண்ணம் எங்களது புது வடிவமைப்பு இருக்கும் என நம்புகிறோம்," என்றார் திரு சங்கர்.
ஈயச்செம்பு, மண்பானைகள் முதலியவற்றைப் பயன்படுத்தும் பாரம்பரிய இந்திய சமையல் முறைகளும் அறி முகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சமையல் கலைஞர் குழு, ஆரோக்கியமான முறையிலும் உணவைத் தயாரிக்க இருப்பதாக பனானா லீஃப் அப்போலோ கூறியது. 'வீகன்' எனப்படும் நனிசைவ உணவுவகைகளையும் 'க்ளூட்டன்' இல்லாத உணவுவகைகளையும் வாடிக்கையாளயர்கள் எதிர்பார்க்கலாம். 'லாஃப்டி பீக்ஸ்' எனும் மதுபானக் கூடமும் இவ்விடத்தில் ஒருங்கே இடம்பெற்றுள்ளது.
வெவ்வேறு தனிப்பட்ட இடங்களுக்குத் தேடி செல்லாமல் ஒரே இடத்தில் பல்வகை உணவுகளை ஒருங்கிணைத்துள்ள இம்முயற்சியை லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கத்தின் ஆலோசகர் ராஜ்குமார் சந்திரா பாராட்டினார்.
"ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண உணவு நிலையமாக இருந்த இவ்விடம் இப்போது நவீனமயமாகி உள்ளது. அதே வேளையில் லிட்டில் இந்தியாவின் மரபுடைமையை மறக்காமல் இதன் நிறுவனர்கள் புகைப்படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை இணைத்தது சிறப்பு," என்றார் அவர்.

