உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுவதாகவும் எளிதான முறையில் எடையைக் குறைக்கவும் எதிர்ப்புசக்தியைப் பெருக்கவும் வழிவகுப்பதாகவும் சில வகை உணவுப் பொருள்கள் விற்கப்படுவது நாம் அறிந்ததே.
பழரசம், கூழ் எனப் பல வடிவங்களில் 'நச்சு நீக்கும்' உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால் உடலில் இருந்து உண்மையிலேயே நச்சுகளை அகற்ற முடியுமா என்ற கேள்விக்கு, "பெரிதாக இல்லை," என்பதே வல்லுநர்களின் பதில்.
இத்தகைய உணவுப்பொருள்களின் செயல்திறனுக்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை என்பதை அவர்கள் சுட்டுகின்றனர்.
பெரும்பாலும் இந்த உணவுப்பொருள்கள் விலங்குகளிடம் சோதிக்கப்பட்டவையாக இருக்கின்றன. அல்லது இவற்றின் தயாரிப்பாளரே இவை குறித்த ஆய்வுகளுக்கு நிதியளிக்கிறார்.
மனிதர்களிடம் இத்தகைய உணவுப்பொருள்களின் பாதிப்பு குறித்து வெகுசில ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
"நச்சுகளை நீக்கும் ஆற்றல் இயற்கையாகவே மனித உடலுக்கு உண்டு. இதற்கு, சிறப்பு உணவுப்பொருள் எதையும் உண்ணத் தேவையில்லை," என்கின்றனர் வல்லுநர்கள்.
ஒவ்வொரு நாளும் நமது குடல், கல்லீரல், சிறுநீரகம், தோல் ஆகியவை உடலில் இருந்து நச்சுகளையும் கழிவுகளையும் வெளியேற்றுகின்றன. இவற்றுக்கெல்லாம் சிறப்பு உணவுப்பொருள் எதுவும் தேவைப்படுவதில்லை என அவர்கள் எடுத்துரைத்தனர்.
சிலர் குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைக்கும் நோக்கில் 'நச்சு நீக்கும்' உணவுப் பொருள்களை நாடுகின்றனர். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைவதால் எடை குறையும். ஆனால் அவர்கள் மீண்டும் வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்கும்போது உடல் எடை மீண்டும் கூடுகிறது.
பழங்கள், காய்கறிகள் என சில நாள்கள் உண்பதால் உடலின் எதிர்ப்பு ஆற்றல் கூடுவது உண்மைதான். ஆனால் மீண்டும் வழக்கமான உணவுமுறைக்குத் திரும்புகையில் எதிர்ப்பு சக்தி பழைய நிலைக்கே திரும்புகிறது என்று வல்லுநர்கள் கூறினர்.
அடிக்கடி இந்த உணவுப் பொருள்களை மட்டும் உண்பதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை இழக்கும் அபாயம் குறித்து அவர்கள் எச்சரித்தனர். இதயம், சிறுநீரகம் போன்றவை செயலிழக்கவும் இது காரணமாகக்கூடும். மாறாக ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி இவையே நீண்டகாலப் பலனை அளிக்குமென அவர்கள் வலியுறுத்தினர்.
படம்: இணையம்

