ஹூஸ்டன்: நீல் ஆர்ம்ஸ்டிரோங் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நிலவில் காலெடுத்து வைத்தபோது அணிந்த விண்வெளி ஆடைகள் பழசாகிவிட்டது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் மீண்டும் நிலவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள நாசா, தனது விண்வெளி வீரர்களுக்கென புதிய ஆடைகளைத் தயாரித்திருக்கிறது. ஆடை பற்றிய சில விவரங்களை நாசா ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி நிலையத்தில் நேற்றுமுன்தினம் வெளியிட்டது.
விண்வெளி வீரர்கள் நிலாத் தரையில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளத் தோவையான சிறப்பு அம்சங்கள் ஆடைக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. சுவாச இயந்திரங்கள், விளக்குகள், அதிக அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஆற்றல் போன்றவையும் ஆடைகளில் இருக்கும்.
நாசா அதன் விண்வெளி ஆடைகளைக் கடைசியாக 1981இல் மேம்படுத்தியது.
வரும் 2025இல் ஆர்டெமிஸ் III திட்டத்தின்கீழ் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டு வருகிறது. அதற்குள் புதிய விண்வெளி ஆடைகளை உருவாக்குவது அதன் இலக்கு.
ஆர்டெமிஸ் பயணத்தில் பெண்களை விண்வெளிக்கு அனுப்பப் போவதாக நாசா கூறியிருந்தது. ஆனால் பழைய ஆடைகள் பெண்களுக்கு அளவெடுக்கப்படவில்லை. புதிய ஆடை பெண்களுக்கும் பொருந்தும் என்று நாசா கூறியது.
புதிய ஆடையுடன் விண்வெளி வீரர்களுக்குப் புதிய தலைக்கவசங்களும் காலணிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைக்கசவத்தில் காணொளிக் கருவிகளும் காலணிகளில் நிலவின் குளிரைத் தாங்கும் ஆற்றலும் உள்ளன.
டெக்சஸைச் சேர்ந்த எக்சியோம் ஸ்பேஸ் எனும் நிறுவனம் ஆடையை வடிவமைப்பதற்கான குத்தகையைச் சென்ற ஆண்டு பெற்றது. குத்தகையின் மதிப்பு $228 மில்லியன் டாலர் (S$307.27 மி.) ஆகும்.

