ஆணாதிக்கம், பாலின பாகுபாடுகளை உடைத்தெறியும் நோக்குடன் நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான கார்த்திக் குமார் கடந்த சனிக்கிழமையன்று தனது நகைச்சுவை நிகழ்ச்சியை மேடையேற்றினார். இந்நிகழ்ச்சி அலையன்ஸ் ஃபிரான்சைஸ் அரங்கத்தில் இரவு ஏழு மணியளவில் நடைபெற்றது.
‘ஆண்ஸ்ப்லெய்னிங்’ என்ற இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க கிட்டத்தட்ட 200 பேர் திரண்டனர். தனது வாழ்க்கையில் சோகம், வலி உண்டாக்கிய நிகழ்வுகளை நகைச்சுவையுடன் பகிர்ந்ததோடு, ஓர் ஆணாக தனது அடையாளத்தையும் சலுகைகளையும் பற்றி சிந்திக்கத் தூண்டிய சம்பவங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.
ஆணாதிக்கம், உறவுகளில் இருக்கக்கூடிய சிக்கல்கள் போன்ற மோசமான பிரச்சினைகளைச் சாமர்த்தியமாக நகைச்சுவை கலந்து பேசி மக்களின் கைதட்டலைப் பெற்றார் கார்த்திக் குமார். நிகழ்ச்சியின் 90 நிமிடங்களில் பார்வையாளர்களின் கவனத்தை திசைதிருப்பாமல் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந் நிகழ்ச்சி மக்களை சிந்திக்கவும் வைத்தது.
நம் சமுதாயத்தில் இருக்கும் பாலினம் தொடர்பான பொறுப்புகளை விமர்சித்து தனது வாழ்க்கை அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார் கார்த்திக் குமார். இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் அடிப்படையில் ஒருவரைப் புறக்கணிப்பது தவறு என்ற முக்கிய கருத்தைத் துல்லியமாக நகைச்சுவையுடன் முன்வைத்தார். ஆணாகப் பிறந்தால் கிடைக்கும் சலுகைகளை நக்கலுடன் வினவினார். அரங்கத்தில் உள்ள பார்வையாளர்களின் வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
தனக்குக் கேடு விளைவித்த ஒரு காதல் அனுபவத்தையும் அதன் காரணமாகத் தனக்கு ஏற்பட்ட மனவுளைச்சலையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார் கார்த்திக் குமார். மனதைப் புண்படுத்திய அந்த உறவிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ஓர் ஆணாகத் தனது அடையாளத்தைச் செதுக்க உதவியதை கேலியாகக் கூறினார்.
ஆணாதிக்கம் ஓர் ஆணுக்கு சக்தியையும் பதவியையும் கொடுக்கும் என்று பலரிடையே இருக்கக்கூடிய தவறான எண்ணத்தைப் புறக்கணித்து, அது நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்கவேண்டும் என்ற அறிவுரையை மக்களுக்குப் புரியும் வண்ணம் நகைச்சுவையுடன் எடுத்துச் சொன்னார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்திருந்த அதில் இடம்பெற்ற நகைச்சுவையான சம்பவங்களைச் சித்திரிக்கும் சிறு ‘டூடல்ஸ்’ ஓவியங்களை நினைவுச் சின்னமாக கார்த்திக் குமார் பார்வையாளர்களுக்கு வழங்கினார். மகளிர் தினத்தையொட்டிப் பெண்களுக்கு ஒட்டுவில்லை அட்டையையும் வழங்கினார்.
“கார்த்திக் குமார் கூறிய கதைகள் சிரிப்பு ஊட்டுவதோடு, ஆண்களாக எங்களை சிந்திக்க வைத்தது. தங்களின் உணர்வுகளைப் பற்றியும் பேச ஆண்களை ஊக்குவித்தது இந்நிகழ்ச்சி,” என்றார் நிகழ்ச்சியை தனது குடும்பத்துடன் பார்க்க வந்த 25 வயது ர. தக்ஷ்ணா.
குடும்பத்தில் இருக்கும் பெண்களுடன் இந்நிகழ்ச்சியைப் பார்த்தது மாறுபட்ட அனுபவமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஓர் ஆணாக தனக்கு இருப்பதாகச் சொல்லப்படும் சலுகைகளை கேள்விகேட்காத தக்ஷ்ணா, நிகழ்ச்சி முடிந்தவுடன் அது குறித்து குடும்பத்தாருடன் கலந்துரையாடியதாகக் கூறினார்.
“இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்கிறோம். இது போன்ற கருத்துகளைக் கொண்ட நிகழ்ச்சிகள் மக்களைச் சென்றடைய எங்கள் நிறுவனம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது,” என்றார் ‘பப்பல் ஓரா ப்ரொடக் ஷன்’ நிறுவனத்தின் இயக்குநரான ஜானகி சாமிக்கண்ணு.
ஆண்ஸ்பெலெய்னிங்’ நிகழ்ச்சியை மேலும் பல நாடுகளில் மேடையேற்ற தயாராகிறார் கார்த்திக் குமார்.
ரச்சனா வேலாயுதம்