சிங்கப்பூர் ரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கத்தின் (ஜீடாஸ்) ஆண்டுப் பொதுக் கூட்டமும் விருந்து நிகழ்ச்சியும் இம்மாதம் 10ஆம் தேதியன்று சந்தர் சாலையில் உள்ள மிஸ்டர் பிரியாணி உணவகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு அ. முகம்மது பிலாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கொவிட்-19 காலத்தில் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் உதவி கிடைக்கப் பெற்றதற்கும் அதற்கு உதவியாகச் செயல்பட்ட சிங்கப்பூர் மலாய் வர்த்தக தொழிற்சபை, சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழிற்சபை, நிதி அமைச்சு ஆகியவற்றுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாறிவரும் சூழலில் ரத்தினக்கல் வர்த்தகர்களை இணையம்வழியாகவும் இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வர்த்தகம் செய்ய ஊக்குவிப்பதோடு அத்தகைய முயற்சிகளுக்கு நிதியுதவி வழங்கும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பை அணுக ஜீடாஸ் கைகொடுக்கும் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக சங்கத்தின் ஆலோசகர் திரு பஷீர் அகமது தேர்தல் அதிகாரியாக இருந்து 2023-2025 காலகட்டத்திற்கான செயலவைத் தேர்தல் நடத்தப்பட்டது. சில புதிய செயலவையினரோடு முகம்மது பிலால் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செய்தி, படம்: ஜீடாஸ்