கருணாநிதி துர்கா
'பிரண்ட்ஸ் ஆஃப் தி மியூசியத்தின்' ஏற்பாட்டிலும் ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் ஆதரவுடனும் 'ஃபிரைடே வித் பிரண்ட்ஸ்!' என்ற தொடர் நிகழ்ச்சி பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அடங்குகிறது 'பஞ்சதந்திரம்: பண்டைய இந்தியாவின் மறக்கமுடியாத புராணக்கதைகள்' எனும் சொற்பொழிவு.
இம்மாதம் 24ஆம் தேதியன்று நீ ஆன் கொங்சி அரங்கில் இரவு ஏழுமுதல் எட்டு மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாகப் பங்குபெறலாம். சொற்பொழிவின் பேச்சாளர் அபா தயாள் கவுல்.
முதன்முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதைகள் பொழுதுபோக்குக் கதைகள்போலத் தோன்றலாம். ஆனால், அவை அரசியல் சூழ்ச்சி பற்றிய மூலக் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் கதைகள் ஆகும்.
அவற்றில் அரசநீதியின் மையக்கருத்துகள் விலங்குக் கதைகளின்மூலம் சொல்லப்பட்டுள்ளன. சிறுவர்கள் மட்டுமின்றிப் பெரியவர்களின் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இந்நிகழ்ச்சி அமையும்.
இம்மாதம் மேலும் பல நிகழ்ச்சிகள் ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேல்விவரங்களுக்கு அதன் இணையப்பக்கத்தை நாடலாம்.

