அனுஷா செல்வமணி
மூன்று தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்ட கட்டிலை ஒரு குடும்பம் வழிவழியாகப் பராமரித்து, அந்தக் குடும்பத்து தலைமுறைகளின் மரபாகக் கருதப்படும் கட்டிலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது ‘கட்டில்’ என்ற திரைப்படம்.
பல தலைமுறைகளின் உணர் வாகவும் தமிழர் பண்பாடு உள்ளிட்ட அடையாளங்களின் அம்சங்களை அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் முயற்சியாகவும் திகழவுள்ளது இத்திரைப்படம்.
24 ஆண்டுகளாக தமிழ்த் திரை யுலகில் பயணித்துவரும் இ.வி. கணேஷ்பாபு திரைப்படத்தை இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இத்திரைப்படம், கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
மனிதன் ஓர் இடத்தை விட்டு வேறோர் இடத்திற்குப் புலம்பெயர்ந்து செல்லும்போது, அவன் தன்னுடன் ஏதோ ஒரு பொருளை எடுத்துச் செல்வான்.
தன் மனதிற்கு நெருக்கமான பொருளை எடுத்துச் செல்லும் உணர்வை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்காமல், அந்த உணர்வைத் தத்ரூபமாகப் பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக உணரச் செய்யும் வகையில் உருவாகியுள்ளது, ‘கட்டில்’ திரைப்படம்.
சினிமாவின் மூத்த ஆளுமைகள் சிலரின் பங்களிப்பு இந்தத் திரைப்படத்திற்கு வலுசேர்த்திருக் கிறது. தேசிய, மாநில விருதுகளைப் பெற்ற பீ. லெனின், பி.கிருஷ்ணமூர்த்தி, கவிப்பேரரசு வைரமுத்து, புதிய திரை மொழியால் வசீகரிக்கும் மதன்கார்க்கி ஆகிய கலைஞர்களின் பங்களிப்பு இப்படத்தைச் செதுக்கியுள்ளது.
மேலும், ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்திற்கு மெருகூட்டியுள்ளது.
இன்றைய இளையர்களை அதிகமாக ஈர்க்கும் சித்ஸ்ரீராம் குரலுடன், இதர பாடகர்களான சத்யபிரகாஷ், சைந்தவி, திவாகர், பிரசன்னா, அனிதா கார்த்திகேயன் ஆகியோரும் பாடியுள்ளனர்.
இம்மாதம் 17ஆம் தேதி, ‘கட்டில்’ படத்தின் பாடல் வரி காணொளிகளின் தொடக்கவிழா சிங்கப்பூரில் நடைபெற்றது. இ.வி. கணேஷ்பாபு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
“இது நம்ம வாழ்க்கையில் கூட நடந்திருக்கே, இது திரைப்படத்தில் பார்க்கும்போது உடல் சிலிர்க்கிறது என்று நினைக்கும் அளவிற்கு அந்த உணர்வு ‘கட்டில்’ படம் பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் ஏற்படும்,” என்று பகிர்ந்துகொண்டார் இ.வி. கணேஷ்பாபு.