வருகிற விடுமுறையில் எந்த ஊருக்குப் பறக்கலாம் என வேலை நெருக்கடியில் யோசனைகள் ஏற்படலாம்.
சிலர் எந்த நாட்டுக்குப் போய் சுற்றிப் பார்க்கலாம், எந்த ஹோட்டலில் தங்கலாம் என்பதைக்கூட முடிவு செய்து வைத்திருப்பார்கள்.
ஆனால் விமானக் கட்டணங்களின் விலையைப் பார்த்தால் பயணத்தையே ஒத்தி வைத்துவிட்டு உள்ளூரிலேயே போர்வையைப் போர்த்தி முடங்கிவிடலாம் என்று தோன்றும்.
ஆனால் மலிவான விலையில் விமான சீட்டுகளுக்கு முன்பதிவு செய்ய சில விவேகமான வழிகள் இருக்கின்றன. இதனைப் பின்பற்றினால் பறப் பதற்கு எல்லையில்லை.
விடுமுறையைக் கழித்து புத்துணர்வுடன் புதிய வேகத்துடன் நாடு திரும்பலாம். எந்த நாளில் விமான பயணச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்வது, எந்த நாளில் வெளிநாடுகளுக்குச் செல்லலாம், எவ்வளவு நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யலாம் என்பதையெல்லாம் மலிவானக் கட்டணங்களுக்காக கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்.
நீண்ட விடுமுறை வேண்டுவோருக்கு இருக்கவே இருக்கிறது, மே 1 (தொழிலாளர் தினம்), ஏப்ரல் 22 (நோன்புப் பெருநாள்). இந்த இரு நாள்களும் வார இறுதி நாள் களைச் சேர்த்து நீண்ட விடுமுறையைத் தருகின்றன.
வாரயிறுதியில் முன்பதிவு; வார நாட்களில் பறக்கலாம்: வாரயிறுதியில் விமான பயணச் சீட்டுகளுக்கு முன்பதிவு செய்து வார நாள்களில் பயணம் செய்தால் கட்டணம் குறைவாக இருக்கும் என்று பயண முன்பதிவு இணையத் தளங்களின் தரவுகள் காட்டுகின்றன.
எக்ஸ்பீடியா (Expedia) 2023 புள்ளி விவரங்களின்படி சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பயணிகள், ஞாயிற்றுக் கிழமைகளில் முன்பதிவு செய்தால் வெள்ளிக் கிழமையைவிட முப்பது விழுக்காடு வரை கட்டணம் குறைவாக இருக்குமாம். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் விமானக் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
இதே புள்ளி விவரங்கள், வியாழக்கிழமைகளில் பயணத்தை வைத்துக்கொண்டால் ஞாயிற்றுக்கிழமை பயணத்தைவிட 25 விழுக்காடு விமானக் கட்டணம் மலிவாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் செய்தால் கட்டணம் அதிகமாகவே இருக்கும்.
டிராவேலோகா (Traveloka) எனும் மற்றொரு இணையத் தளம் வெள்ளிக்கிழமைகளில் கட்டணம் அதிகமாகவும் செவ்வாய்க் கிழமை கட்டணம் மலிவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கிறது. அதாவது இந்த இரண்டு நாட்களுக்கு இடையிலான விலை வித்தியாசம் 14 விழுக்காடு வரை இருக்கும்.
பொதுவாக, வாரத்தின் மத்தியில் கூட்டம் குறைவாகவும் விமானங்களின் கட்டணம் மலிவாகவும் இருப்பதை எதிர்பார்க்கலாம். இந்தக் காலகட்டங்களில் உங்களுக்குப் பக்கத்தில் உள்ள இருக்கையும் காலியாக இருக்க வாய்ப்புள்ளது.
உதாரணமாக, லண்டனுக்குச் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் விமானக் கட்டணம் செவ்வாய் முதல் வியாழன் வரை மற்ற நாள்களுடன் ஒப்பிடும்போது குறைந்தது 100 முதல் 200 வெள்ளி வரை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் வாரத்தின் மத்தியில் பயணச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்வது சிறந்த உத்தியாகும்.
புதிய பாதைகளுக்கான சிறப்புக் கட்டணம்: புதிய பாதைகளுக்கான கட்டணம் எதிர்பாராத அளவுக்குக் குறைவாக இருக்கும். புதிய பாதையை பிரபலப்படுத்துவதற்காக சிறப்பு சலுகைகளை விமான நிறுவனங்கள் வழங்குகின்றன.
உதாரணமாக பிப்ரவரியில் சிங்கப்பூர்-சியாங் மாய் புதிய சேவையை ஏர் ஏஷியா அறிமுகப் படுத்தியது.
இதற்கான ஒரு வழிக்கட்டணம் 3,390 பாட் (S$136). இந்த சிறப்புக் கட்டணச் சலுகை 2022 நவம்பரில் வழங்கப்பட்டது. இப்போது இந்தச் சலுகை முடிந்துவிட்டாலும் வரும் மே மாதத்தில் சியாங் மாய் இரு வழிப் பாதைக்கான பயணச் சீட்டை 255 வெள்ளிக்கு வாங்க முடியும்.
கொள்ளைநோய்க்குப் பிறகு எல்லைகள் திறக்கப்படுவதால் பல விமான நிறுவனங்கள் புதிய சேவைகளை சலுகைகளுடன் அறிமுகப் படுத்தி வருகின்றன.
திட்டமிடப்படாத பயணத்தின் மூலம் புதிய அனுபவம்: விடுமுறையில் எங்கு செல்லலாம் என்ற திட்டமே இல்லாதவர்கள் ‘கயாக்’ (Kayak) எனும் தேடல் தளத்தில் தேதிகளைக் குறிப்பிட்டால் அந்த தேதியில் உள்ள மலிவான விமானக் கட்டணங்களை பட்டியலிடு கிறது.
இதன் மூலம் இதுவரை செல்லாத இடங்களுக்குச் சென்று புதிய அனுபவங்களைப் பெறலாம்.
உதாரணமாக, மே மாதத்தில் தென் கொரியாவுக்கான கட்டணம் $432லிருந்து தொடங்குகிறது.
இந்தக் கட்டணத்தில் நூறு வெள்ளி அதிகமாக கொடுத்தால் ஒசாகாவுக்குச் செல்ல முடியும்.
ஐரோப்பாவில் கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு விமானக் கட்டணம் மலிவாக இருப்பதை ‘கயாக்’ காட்டுகிறது.
அதாவது மேட்ரிட் நகரத்துக்கு $950லிருந்தும் ஏதென்சுக்கு $816லிருந்தும் தொடங்குகிறது.
மே மாதம் நெருங்கிவிட்டதால் தற்போது கட்டணம் சற்று அதிகரித்திருக்கலாம்.
முன்கூட்டியே முன்பதிவு செய்வது: நான்கு அல்லது ஆறு மாதங் களுக்கு முன்பே பயணத்தைத் திட்டமிட்டு பதிவு செய்தால் குறைவான விலையில் விமானங்களில் பறக்கலாம் என்று எக்ஸ்பீடியா (Expedia) பயண முன்பதிவு தளம் தெரிவிக்கிறது.
உதாரணமாக வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் சிங்கப்பூரிலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கான இரு வழிப் பயணத்திற்கான சிங்கப்பூர் ஏர்லைன்சின் கட்டணம் S$1,203லிருந்து தொடங்குகிறது.
முன்கூட்டியே பதிவு செய்வதால் பல உலக நகரங்களுக்கும் குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.
விமான பயணச்சீட்டுகளுக்கு ரொக்கம் கிடைக்கும் திட்டம்: உள்ளூரில் தொடங்கப்பட்ட ஷாப்பேக் (Shopback) என்ற நிறுவனம் தனது தளத்தின் வழியாக வாடிக்கையா ளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பியளிக்கும் திட்டத்தை வைத்துள்ளது.
இதில் டிரிப்.காம் (Trip.com), எக்ஸ்பீடியா, டிராவலோகா போன்ற முன்பதிவு தளங்களும் இணைந்துள்ளன.
வாடிக்கையாளர் முன்பதிவு செய்வதால் ஷாப்பேக்குக்கு கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை அது வாடிக்கையாளர் களுக்கு பகிர்ந்தளிக்கிறது.
(ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளேட்டில் வெளியான கட்டுரையின் தொகுப்பு)