அதிக சர்க்கரையும் கொழுப்புச் சத்தும் உள்ள உணவுகளை அடிக்கடி உண்ணும்போது, அவை மூளைச் செயல்பாடுகளை மாற்றி, இனிப்புவகைகள் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று மூளைக்குக் கற்றுத்தந்து தூண்டிவிடும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
அந்தப் பழக்கத்தைத் திருத்திக்கொள்வது கடினமாக இருக்கும் என்று யேல் பல்கலைக் கழகமும் ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் வளர்சிதை மாற்ற (Metabolism) ஆய்வுக் கழகமும் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் சர்க்கரையும் கொழுப்புச் சத்தும் அதிகமுள்ள உணவுகளை இயற்கையாகவே ஒருவருக்குப் பிடிக்கிறதா அல்லது அது கற்றுக்கொண்ட ஒரு பழக்கமா என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.
ஆனால், தினமும் அதிக சர்க்கரையும் கொழுப்பும் உள்ள உணவுவகைகளைச் சாப்பிட்டு வரும்போது ஊக்கமும் வெகுமதியும் பெறுவதற்குப் பொறுப்பான மூளையின் பகுதி செயல்படும் விதம் மாறுவதாக ஆய்வு தெரிவித்தது.
இவ்வகை உணவுகளால் தூண்டப்படும் மூளை, அவற்றையே விரும்புகிறது. அதிக சர்க்கரை உள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்டுவிட்டு, உடல்நலனுக்கு ஏதுவான உணவு வகைகளைச் சாப்பிடும்போது, மூளை அதை எளிதில் ஏற்காது என்றும் கூறப்பட்டது.
ஆக, இன்றைய பல உணவுப் பழக்கங்கள் மூளை பழகிக் கொண்டவைதான் என்பது ஆய்வு கூறும் செய்தியாகும்.

