ரச்சனா வேலாயுதம்
மலையாளப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நிலவிளக்கு, அணிகலன்கள், ஓணம் பண்டிகையின் 'சத்யா' விருந்து படைக்கும் முறை, பூக்கோலமான அத்தப்பூவிடல் ஆகிய அம்சங்களை எடுத்துரைத்தது இம்மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமை நடந்த 'சிங்கப்பூர் மலையாளிகள்' நிகழ்ச்சி.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் கிட்டதட்ட 100 பேர் கலந்துக்கொண்டனர். தேசிய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வை சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம் வழிநடத்தியது.
ரேஷ்மி பிள்ளையின் பயிற்றுவிப்பில் பல சமயத்தினரின் நடனங்கள் மேடையேற்றப்பட்டன.
"மக்கள் தொகையில் சுமார் 28,000 பேர்கொண்ட சிறுபான்மையினராக மலையாள சமூகத்தினர் இருந்தாலும், சிங்கப்பூரின் பல முக்கிய பொறுப்புகளிலும் பதவிகளிலும் மிளிர்ந்து வருகிறார்கள்," என்றார் நிகழ்ச்சியில் உரையாற்றிய முனைவர் அனிதா தேவி பிள்ளை.
மலையாள சமூகத்தினர் பெயர்வைக்கும் முறை, பண்பாட்டுக் கூறுகள், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை விளக்கிய முனைவர் அனிதா, தம்மைப் போன்றவர்கள் சிங்கப்பூரில் மலையாளம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழி களில் கைதேர்ந்து அவற்றைப் பயன்படுத்தும் சூழல் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அடுத்து நடந்த குழுக் கலந்துரையாடலில் கதகளி நடனத்தின் பாவனைகள், கை அசைவுகள், ஆகியவை பற்றி விளக்கினார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளரும் கதகளி கலைஞருமான முனைவர் கணேஷ் ஐயர்.
"குறுகிய காலக்கட்டத்தில் ஒருவர் கதகளி நடனத்தைக் கற்றுக்கொள்ளலாம். அன்றாட வாழ்க்கை உணர்வுகள், நடவடிக்கைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இந்த நடனம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.
மலாய், சீன மொழிப் பாடல் களைக் கதகளிக்கு ஏற்ற இசையில் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தார் முனைவர் கணேஷ். மேலும், பாரம்பரிய உடையணிந்த சில பங்கேற்பாளர்கள் அவற்றின் சிறப்புகளை விளக்கினர்.
"இவ்வகைப் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சிகள்மூலம் பிற பண்பாடுகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் பல இனத்த வரிடையே நல்லிணக்கம் பேணவும் முடியும்," என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் இளவழகன் முருகன்.

